(Reading time: 1 - 2 minutes)

 

அப்பா இறந்த பின்னர் செய்த கள்ளத்தனங்கள்... 

 

அதிகாலையில்
அலமாரி திறந்து
கொள்ளையடிக்கும் 
கள்ளத்தனத்துடன்
அம்மாவுக்குத் தெரியாமல்
நுகர்ந்ததுண்டு அப்பாவின்
வியர்வைச் சட்டை...

அம்மா தூங்கும் போது
அம்மாவுக்குத் தெரியாமல்
பொட்டு வைத்துப்
பார்த்ததுண்டு அம்மாவின்
நெற்றியில்...

யாருக்கும் தெரியாமல்
அப்பாவின் செருப்புக்குள் கால்
நுழைத்து ஒரு நடை நடந்து 
பின் துடைத்து
அதே இடத்தில்
வைத்து விடுவதுண்டு

அப்பாவின் துண்டுடன்  
குளியலறை நுழைந்து
அடக்க முடியாமல் வாய்
பொத்தி அழுததுண்டு...

நடு இரவில் போர்வைக்குள்
முகம் புதைத்து
அப்பா என ரகசியமாய்
அழைத்துப் பார்ப்பதுண்டு...

அப்பா புகைப்படத்தில்
வைத்த பொட்டை அழித்து
அப்பாவைத் திருப்பிக்
கொண்டுவர நினைத்ததுண்டு...

மரணமே நிகழாத வீட்டில்
இருந்து ஒரே ஒரு பிடி
கடுகு வாங்கி வர
வீதி வீதியாய் அலைந்ததுண்டு....

பசிக்கும் கொலைப்
பட்டினியில் காலி
அரிசி டப்பா பார்த்து
"என்னமோ தெரியவில்லை
இப்போலாம் பசிப்பதேயில்லை"
எனப் பொய் சொல்வதுண்டு
அம்மாவிடம்...

தூங்குவது போல நடிக்கையில்
தலை வருடும் கைகளும்
அடிக்கடி அம்மாவின் கன்னம்
நனைக்கும் நீரும் சொல்லியது....

"எனக்கு எல்லாம் தெரியுமென்று"...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.