(Reading time: 1 - 2 minutes)

 

சும்மாயிருப்பதுவும் சுகம்தன்னே....முடிந்தால்!  

 

சும்மாவாச்சுக்கும் சும்மாயிருப்பதைத்
தேர்ந்தெடுத்திருக்கிறேன் இன்று...
மனதொன்றி எதிலும்
மனம் லயிக்கவில்லை

எப்போதும் கைகொடுக்கும்
இசையும்,புத்தகமும்,
தேனீரும்,மழையும் கூடக்
கைவிட்டு விட்டது....

சும்மாயிருக்கும் போது
வீடு அப்படியே சுருட்டி
உள்ளிழுத்துக் கொண்டது...
கொடிக் கயிறு துணிமணிகள்
கழுத்தை நெறித்தது...

ஒழுங்கற்ற அலமாரிகள் என்னையும்
உள்ளிழுத்து அடைத்துக் கொண்டது....
குப்புறப் படுத்திருந்த புத்தகங்களும்
பத்திரிகைகளும், தரை விரிப்பும்
கைப்பிடித்துக் கொண்டன...


எத்தனை கவனமாயிருந்தாலும்
சும்மாயிருக்க முடியாமல்
சிறகசைத்துக் கொண்டேயிருக்கும்
வண்ணத்துப் பூச்சியைப்
பார்த்துக் கொண்டே

கொஞ்சம் எழுத்துக்களைச்
சேர்த்தும் பிரித்தும்...
கொஞ்சம் வார்த்தைகளைச்
சேர்த்தும் பிரித்தும்...
சும்மாயிருக்கவும் முடியாமல்
தன்னையே உருவாக்கிக்
கொண்டது இந்தக் கவிதை ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.