பெண்களுக்குள் நட்பு...
பத்து மாதம் சுமந்து பெற்றதால் இவள் என் தாய்..
கூடப்பிறந்ததால் இவள் என் சகோதரி...
உறவும் இல்லை...சேர்ந்து வளரவும் இல்லை...
ஆனாலும் நீ என் நிழல் ஆனது எப்படி ?
கல்லூரி நாட்களில் சேர்ந்து செய்த குறும்புகள்..
காகிதங்களில் வரைந்து மகிழ்ந்த நம் உருவங்கள்..
காற்றை போன்ற கட்டுக்குள் அடங்காத நம் எண்ணங்கள்..
கவலைகளை ஒதுக்கி கால் வீசி நடந்த நம் பயணங்கள்..
எதுவுமே மறுப்பதற்கில்லை என் தோழி..
பார்த்து பேசி வருடங்கள் இருக்கும்...
தொலைப்பேசியில் பேசி மாதங்கள் இருக்கும்..
மின்னஞ்சல் அனுப்பி வாரங்கள் ஆகயிருக்கும்...
ஆனாலும் நாள்தோறும் ஏதோ ஒன்று உன்னை நினைவுபடுத்தும்..
நம் வீடு நம் குடும்பம் நம் குழந்தை என்று
நமக்கு இருக்கும் பொறுப்புகள் ஆயிரம்..
நாம் நிதம் செய்யும் வேலைகள் நூறு..
அதில் நமக்கு பேச நேரம் எங்கே கூறு ?
பேசும்போது..
நலமா என்ற ஒரு வார்த்தை போதும்..
உன் உடல் நலமா..
உன் உள்ளம் நலமா..
உன் உற்றார் நலமா..
என்று ஆயிரம் கேள்விகள் அதிலடக்கம்!
உன் உடலில் எந்த குறையும் வேண்டாம்..
உன் வாழ்வில் ஏதும் வலிகள் வேண்டாம்..
உன் மனதில் எந்த சுமையும் வேண்டாம்..
என்று ஆயிரம் வேண்டுதல்கள் அதிலடக்கம் !
ஆண்களுக்குள் நட்பு வாழ்நாள் முழுமைக்குமாம் ...
என் கணவர் சொன்னது..
அவருக்கு தெரியவில்லை..
பெண்களுக்குள் நட்பு இறந்த பிறகும் கூட தொடர்வது!