கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 59 - படித்திடாமலும் இருந்திடுவேனா என்ன….!!!! - மீரா ராம்
“இதோ வந்துட்டேன்மா…”
வாசலில் நின்று குரல் கொடுத்த
அம்மாவிற்கு பதில் சொல்லிக்கொண்டே
துப்பட்டாவை பிடித்தபடி மூச்சிரைக்க
ஓடிக்கொண்டே வாசலை அடைந்தேன்…
“எல்லாம் எடுத்துட்டியா?...”
அம்மா கேட்டிட, சிறு தலையசைப்பை
பதிலாய் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்…
ஏதேதோ சில கதைகள் பேசியபடி
சென்ற இருவரும் சற்று நேரத்திலேயே
போக வேண்டிய இடத்தை அடைந்தோம்…
மனதினுள் ஏனோ பெரும் பாரம் வந்து
அடைத்தாற் போல் இருந்தது…
கோவிலுக்குள் சென்றால் மனபாரம் இறங்கி
நிம்மதி கிடைக்கும் என்பார்கள்…
சொல்லிக்கேள்விபட்டதை விட
அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன் நான்…
ஆனால் இன்றோ அந்த நிம்மதி எனக்கு
கிடைத்திருக்கவில்லை கொஞ்சமும்…
மனமாது அலைபாய்ந்து கொண்டே இருந்திட
கையில் இருந்த மாலையை சாமிக்கு
சாற்றும்படி குருக்களிடம் கொடுத்துவிட்டு
அங்கிருந்த பிரகாரத்தை சுற்றிவந்து அமர்ந்தேன்…
அம்மா ஒருபக்கம் தெரிந்தவர்களிடம் கதை பேச
நானோ சாமிக்கு சாற்றும்படி கொடுத்திட்ட மாலையினையே
வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்…
நான் வாங்கிக்கொண்டு வந்த மாலை இறைவனின்
கழுத்தினை அலங்கரித்திடவில்லை இன்னமும்…
அதுவும் என்னை போல் தனிமையில் தனித்திருக்க…
சட்டென்று மனதினுள் ஏதோ ஓர் விடியல்…
ஓர் மாலை இறைவனை சேரவே நேரம் வேண்டுமெனில்
நானும் உன்னை சேர்ந்திட ஓர் நேரம் வரவேண்டுமா?...
எனில் அது அவசியமெனில், அக்காலம் கனிவதும் எப்போதடா?...
கேள்வி எனக்குள் உண்டான சில நொடிகளிலேயே
நான் கொடுத்த மாலையுடன் சேர்த்து இன்னொரு
பூமாலையும் இறைவனின் கழுத்தில் நிறைந்திட,
கண்கள் சுருங்கி விரிந்தது…
“இது யார் கொடுத்த மாலை?...”
யோசனைக் கதவுகளை நான் திறந்திட
என் ஆசை நாயகன் அதில் வந்து நின்றான் அழகுற…
உள்ளம் உவகையில் கூத்தாட
கண்களோ நிறைந்து தழும்பியது நீரில்…
விழிகளோ உன்னிடத்தில் இருக்க
மனமோ நீ செல்லும் திசையில்
சஞ்சரிக்க தொடங்கியது இனிதே…
இதோ என் வாழ்வில்
மற்றுமொரு அத்தியாயம்
உன்னால் எழுதப்படவிருக்கிறது…
அதை நானும் மனமாற
ஏற்காமல் இருப்பேனா?... இல்லை
படித்திடாமலும் இருந்திடுவேனா என்ன!!!!
பூ மலரும்…
{kunena_discuss:1088}