கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 62 - என் காதல் வானிலே….!!!! - மீரா ராம்
வழக்கம் போல கோவிலிலே உன்னை சந்திக்க நேரிட
அன்றும் உன் பாராமுகம் தான் எனக்கு கிடைத்தது…
சரி நம் விதி இதுதான் என எண்ணிக்கொண்டிருக்கையிலே
எனக்கு நேர் எதிரே வந்து அமர்ந்தாய் நீ பத்தடி தொலைவில்…
இதுவேறு சித்திரவதையா?...
எட்டும் தொலைவில் நீ இருக்கிறாய்…
உன்னை ஏறெடுத்தும் பார்த்திட முடியா நிலையில் நான்…
கிடைத்த வாய்ப்பும் கைநழுவி போகிறதா?..
கோபம் மனதினை ஆக்கிரமித்திட,
யாரும் பார்த்திடா வண்ணம் உனக்கு பின்னேயுள்ள
மரம் செடி கொடிகளைப் பார்ப்பது போல் உன்னையும்
சில நொடி… சில நொடிகளேப் பார்த்தேன்…
பார்த்த மாத்திரத்தில் உள்ளிருந்து ஓர் உணர்வு
நாடி நரம்பெங்கும் பொங்கியெழ
மனமானது விம்மி அரற்றியது அக்கணமே…
எத்தனை நாள் தான் இப்படியே நான் மட்டும்
காதல் கொண்ட மலராய் வாடுவது?...
வேதனை என்னை ஆக்கிரமித்திடும் முன்னமே
அதை தூர ஒதுக்கிட்டேன் சிரமப்பட்டு…
உன்னைப் பார்க்கவேனும் முடிந்ததே….
விரக்தி இழையோடிய இதழ்களில்
பார்த்த நிறைவே போதுமென
புன்னகையை படரவிட்டவள், இன்னும்
உன்னைப் பார்த்திட்டால் எங்கே மேலும்
உடைந்து சிதறிடுவேனோ என அஞ்சியவளாய்
தலைகவிழ்ந்து கொண்டேன் நான்…
மடியினில் கண்ணீர் முத்துக்கள்
மளமளவென விழுந்திட,
செய்வதறியாது அழுகையை அடக்கினேன் நான்…
சட்டென என்னை யாரோ அழைத்திட,
கண்ணீரை எனக்குள் உள்வாங்கிக்கொண்டு
விழிகளை துடைத்துவிட்டு நிமிர்ந்து
அழைத்தவருக்கு பதில் கூறிவிட்டு திரும்புகையில்
உன்னை வந்து தஞ்சமடைந்தது என் பார்வை…
அக்கணம் உன் பார்வையும் என்னிடத்தில்…
உடல் சிலிர்த்து உள்ளம் சிலாகித்திட
விழிகள் விரிந்து சுற்றம் மறந்து
உன்னையே நான் பார்த்துக்கொண்டிருக்க,
சட்டென என்னிடமிருந்து விழிகளைப் பிரித்தெடுத்து
யாருடனோ கைபேசியில் பேசுவது போல்
பாசாங்கு செய்திட்டாய் நீ
அங்கும் இங்கும் மேலும் கீழும்
உன் பார்வையை படரவிட்டு…
அட என் கள்வா !!!...
விழிகள் சட்டென கண்ணீர்ப் பூக்களை சிதறவிட்டு
புன்னகைப் பூக்களை ஏந்திட,
மனமானது இறக்கை இல்லாமலே பறந்திட்டதே…
என் காதல் வானிலே !!!…
Note :
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…
நிகழ்ந்த ஒருபாதி என்ன என்று தெரிந்துவிட்டதா?..
மறுபாதி நிகழ்வினையும், இனி நிகழவிருப்பதையும் தெரிந்துகொள்ளலாமா?...
மீண்டும் அடுத்தவாரக் கவிதைத் தொடரில் சந்திக்கலாம்… நன்றி…
பூ மலரும்…
{kunena_discuss:1088}