கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 64 - ஆசை ஆசையாய்….!!!! - மீரா ராம்
ஆசை…
உன்னைப் பார்த்த நாள் முதலே…
எனக்குள் விழுந்தது முதல் ஆசை விதை…
அது வளர்ந்து தளிர்விட்டு படர்கையில்
எனக்குள் எழுந்தது இன்பமெனும் ஆசை செடி…
பின் உயரம் கொண்டு வான்நோக்கி செல்ல
என்னுள் நீண்டது எண்ணமெனும் ஆசை வேர்…
நீரினை உறிஞ்சி உயிர் வாழ
என்னுள் உலவியது மூச்செனும் ஆசை சுவாசம்…
பறவைகள் கூக்குரல் கேட்டு சிலிர்த்திட
என்னுள் ஒலித்தது குரலாய் ஆசை ரீங்காரம்…
தென்றல் காற்றில் தலையசைத்திட
என்னுள் தொலைந்தது மாயமாய் ஆசை மனம்…
பருவம் வந்து மொட்டு உண்டாக
என்னுள் உதித்தது காதலாய் ஆசை நாணம்…
மொட்டவிழ்ந்து வாசம் பரப்பும் மலராகிட
என்னுள் பரவியது கிறக்கமாய் ஆசை மணம்…
தேன் ஊறும் பூவாய், வண்டும் மொய்த்திட
என்னுள் வந்தது பெண்ணாய் ஆசை காதல்…
பெரிய நிழல் தந்து மனங்குளிர
என்னுள் படர்ந்தது கிளையாய் ஆசை விருட்சம்…
விதையாய் விழுந்து
தளிராய் துளிர்விட்டு
இலையாய் பிறந்து
செடியாய் எழுந்து
முகையாய் அவிழ்ந்து
மலராய் மலர்ந்து
மணமாய் மணந்து
நிழலாய் தொடர்ந்து
விருட்சமானாள் பூமிதனில் தன் வேரை படரவிட்டு
மரமங்கை…
அதுபோலே தன்னவன் மேல் காதல் கொண்டு
விதை போல் விழுந்த பார்வை விதையினை
உயிர் கொண்ட விருட்சமாக்கினாள் இம்மங்கையும்…
ஆசைக்கு ஏது அணை…
நீ என் மேல் காதல் கொண்டிருக்கிறாயா
என அறியாத போதே உன் மேல் உள்ள பற்று குறைந்திடவில்லை எனக்கு…
இன்று உன் மனதில் நானும்,
உன் பார்வை வட்டத்தில் இவளும்
இருப்பதை அறிந்த பின்னரும் எப்படியடா சும்மா இருப்பேன்?...
மனமானது குதிக்கிறது…
உள்ளமானது ஊஞ்சலாடுகிறது…
எண்ணமானது விண்ணைத் தாண்டுகிறது…
ஆம்…
இருக்கிறதடா இன்னும் எத்தனையோ என்னோடு…
உன்னிடம் தெரிவிக்கப்போகும் நாளுக்காய் காத்திருக்கிறது…
ஆசை ஆசையாய்…
பூ மலரும்…
{kunena_discuss:1088}