கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 69. எவ்வகை மாயமடா...!!!! - மீரா ராம்
கட்டுக்குள் அடங்கா காளையாகவும்
கைக்குள் அடங்கிடா கடலாகவும்
ஊருக்குள் உலாவந்திட்ட என் நாயகனே…
எல்லைக்குள் அடங்கிடா உன் நினைவும்
தொல்லைக்குள் அடங்கிடா உன் குறும்பும்
நெஞ்சுக்குள் அடங்கிடாது ஆர்பரிக்கிறதேடா…
அலையாய் நான் கரைக்கு சென்றாலும்
மறுகணமே அதே அலையாய் என்னை உனக்குள்
இழுத்துக்கொள்கிறாயே ஏனடா?...
என் மேல் அத்தனை காதலா உனக்கு?...
எண்ண வலைக்குள் நானும் மீனாய் சிக்கிக்கொள்ள
ஹ்ம்ம்.,..கும்… என குரல் கேட்டு தூண்டிலை விட்டு வெளியே வந்திட்டேன் நான்…
“கனவெல்லாம் முடிஞ்சதா?...”
புருவத்தை உயர்த்தி நீயும் கேட்டிட,
உன்னை கண் முன் கண்டதில் உவகை மின்னிட நின்றேன் நானும்…
என் வெட்கம் கண்டு புன்னகை கொண்டாய் நீயும்…
“இன்னைக்கும் இப்படி வெட்கப்பட்டுட்டே இரு…
அப்புறம் நானும் உன்னையே பார்த்துட்டிருப்பேன்…
இந்த வாரக் கவிதையும் முடிஞ்சிடும்…”
கோபமும் ஆதங்கமுமாய் நீயும் கூறிட,
“என்ன சொல்லுறீங்க புரியலையே….” என்றேன் நானும்…
“உனக்குப் புரிஞ்சா தான் இந்நேரம்
கதை எங்கேயோ போயிருக்குமே…”
சொல்லிவிட்டு என்னைப் பார்க்க என் முகத்தில் தெளிவில்லாத நிலை…
“சரி சரி… ரொம்ப யோசிக்காத… புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சிருக்கும்…
அது போதும் எனக்கு…”
“ஹ்ம்ம்…...” நானும் அமைதியாய் நின்று கொள்ள,
“ஹேய்… என்ன கோபமா?...”
உன் குரல் கெஞ்சியது என்னிடம்…
“இல்லையே….”
சட்டென வந்தது என் பதிலும்…
“இத மட்டும் சீக்கிரம் சொல்லு…
மத்ததை சொல்லிடாத…”
முணுமுணுத்தாய் நீயும் நான் கேட்கும்படி தெளிவாய்…
இதழோரம் புன்சிரிப்பு எட்டிப்பார்க்க, அதைக் கண்டுகொண்டாய் நீயும்…
நீ சற்றே முறைத்திட, இது தான் சமயம் என்பதுபோல்
“சரி நேரமாச்சு… நான் கிளம்புறேன்…”
நானும் கூறியது தான் தாமதம்…
“வந்து பத்து நிமிஷம் ஆகலை… அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்லுற?...”
“ஆமா வீட்டில் தேடுவாங்களே…”
“என்னடி விளையாடுறீயா?...”
கோபமாய் நீ எகிறிட, உதட்டில் பூத்த புன்னகையை மறைத்தபடியே
“ஆமா நீங்க என் மாமா மகன் பாருங்க… விளையாடுறதுக்கு…” என்றேன் நானும்
உன் கோபத்தை மேலும் தூண்டியபடி…
“சொன்னாலும் சொல்லாட்டாலும் உன் மாமா மகன் தான் நான்…”
“ஆஹா… அது எப்படியாம்?...”
“ஏன்னா நீ என்…….”
சொல்ல வந்தவன் சொல்லாமல் நின்றிட,
உன்னை செல்லமாய் திட்டினேன் மனதிற்குள்…
“பாவி… சொல்லித்தான் தொலையேண்டா…
நான் யாரு உனக்கு?... சொல்லு…”
மனமானது கூப்பாடு போட, நீயோ சுதாரித்துக்கொண்டாய் அக்கணம்…
“நான் உங்க?....”
நான் எடுத்துக்கொடுத்தும் பிரயோஜனம் இல்லாது,
மந்தகாசப்புன்னகையுடன் நீயும் பதில் பேசாது நிற்க,
கோடிமுறை தொழுதிருப்பேன் நான் கடவுளை…
நீ அக்கணமாவது உன் மனதினை சொல்லிட வேண்டுமென…
“நேரமாச்சு… போகலாமா?... வீட்டுல தேடுவாங்கல்ல?... வா வா…”
கேலியாய் நீயும் கேட்டுவிட்டு, என் முன்னே விரைந்து நடக்க,
அதே இட்த்தில் அசையாதிருந்தேன் நான்…
“ஓய்… என்ன வரலையா?...”
“வரத் தெரிஞ்சவளுக்கு போகவும் தெரியும்…”
கோபத்தில் எரிச்சலாய் கூறிவிட்டு, உன்னையும் தாண்டி நானும் செல்ல,
என் பின்னேயே வந்திட்டாய் நீயும்…
திரும்பி நான் முறைக்க நினைத்த நேரம்,
சிரித்துக்கொண்டே தலைகோதியபடி வந்திட்ட நீ,
என்னைப் பார்த்து புருவத்தை உயர்த்தி சிரிக்க,
மறுகணமே என் கோபம் தொலைந்து காதல் வந்திட்டது உன்மேல்…
ஒற்றைச் சிரிப்பில் உள்ளம் தொலைத்தவளும் நானே…
ஓர் கள்ளச்சிரிப்பில் உள்ளம் பறித்தவனும் நீயே…
உன் குறுநகை, என் சிறுகோபம் போக்கிற்றே…
எவ்வகை காதலடா இது?...
வசியம் தான் செய்திட்டாயோ என்னை…
தெரியலையே….
ஹ்ம்ம்… ஒன்றும் புரியலையேடா…
இது எவ்வகை மாயமடா?.. என் காதலா !!!….
பூ மலரும்…
{kunena_discuss:1088}