கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...!!!! - மீரா ராம்
உள்ளத்தில் காதல் வந்துவிட்டால்
விழிகளில் தூக்கம் ஏது?...
எங்கோ யாரோ சொல்லி நியாபகம்…
காற்றில் கலந்து வந்திட்டது போல்
செவியில் கேட்டது அந்த அசரீரி…
சொன்னது யாராக இருந்தால் என்ன?...
சொல்வதில் இருந்த உண்மை தானே முக்கியம்….
இதயத்தில் நிறைந்திருப்பவனை
கண்ணார காண கோடி ஆசை உண்டாகிலும்
அவனைப் பார்க்கும் தருவாயில்
இமைகள் தாழ்ந்து நிலம் தான் பார்க்கிறது ஏனோ…
ஆயிரம் தான் அவனைப் பார்த்திட உள்ளம் விழைந்தாலும்
நாணம் என்னும் திரை எழுந்து அதை மறைத்திடுகிறது
ஒவ்வொரு முறையும்…
நாணத்தை ஒதுக்க என்னால் முடியவில்லை…
அவனைக் காணாமல் இருக்கவும் இப்பேதையால் இயலவில்லை…
இப்படியே சென்றால் என் நிலை தான் ஏது?...
ஹ்ம்ம்… பெருமூச்சு ஒன்று எழுமே தவிர…
மேற்கொண்டு என்னைப் பற்றிய எண்ணங்கள்
தூசியாய் காற்றில் தொலைந்து விடுகிறது உடனேயே…
இயலாமையோடு இமை மூடி இமைத்திட
சட்டென உதயமானான் என்னவன் என் உள்ளத்தின் ஆழத்தில்…
அப்பப்பா… அவனை நினைக்காமல் இருக்கவே முடியாதே உனக்கு…
இதயத்தோடு நானும் சண்டை போட
நானாகவா நினைக்கிறேன்… நீதான் நினைக்க வைக்கிறாய்…
என பதிலுக்கு போர்க்கொடி தூக்கியது அதுவும்…
என்ன?... என நான் அதிர்ந்து நிற்க,
“ஆமாம்… உன்னை யார் விழி மூடி இமைக்க சொன்னது?...
நீ இமைத்த நொடி அவனின் உதயம் எனக்குள் நிகழுமென
உனக்குத் தெரியாதா என்ன?...
செய்வதெல்லாம் நீ செய்துவிட்டு என்னை குறை சொன்னால்
நான் என்ன செய்ய முடியும்?...
நீ எப்பொழுது இமைப்பாய், உன் கண்ணின் மணிகளுக்குள்
அவனது உருவத்தை எப்பொழுது விதைக்கலாம் என
நெஞ்சம் காத்திருக்கும் பொழுது, நீ இமைத்தால்
அதன் கதவு திறந்து அவனை வெளிக்கொண்டு வராதா?...
என்னடி உன் நியாயம்?...
பிழை செய்வது நீ… பழி மட்டும் என் மீதா?...
அநிநாயமடி நீ செய்வது….”
படபடவென பொரிந்து தள்ளியது மனமும் வேகமாய்…
அது சொல்வதும் உண்மைதானே…
என் இதழ்களும் மெல்ல உரைத்திட,
புன்னகை தான் வந்தது எனக்கு…
ஹ்ம்ம்… நியாயம் அநியாயம் இதெல்லாம்
அவனின் நினைவுக்கு ஏது?...
சட்டென வானில் தோன்றும் மின்னல் போல்
அவனது நினைவு ரேகைகள் எனக்குள் தோன்றிடுதே
என் எண்ண வானிலும்….
ஆம்… வானவில்லும் தோன்று தான் போகும்
என் அழகு காதலனின் வண்ண வரவில்….
பூ மலரும்…
{kunena_discuss:1088}