கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...!!!! - மீரா ராம்
இதுவரை நிச்சயம் என இருவருக்கும்
ஏதும் ஆகாத போதிலும்
என்னவன் நீயே என்ற உறுதி என்னுள்ளே….
எப்படி இது சாத்தியம்?...
விடை தெரிகிறதா உனக்கு…
உனக்கு நானும், எனக்கு நீயும் என்ற
முடிச்சை கடவுள் போட்டது தான் காரணம்…
நீ பிறந்ததும் உன் பெயரின் பக்கத்தில் இடைவெளி விட்டவன்
சில வருடம் கழித்து நான் பிறக்கையில்
என் பெயருக்கு பின் உன் பெயரை எழுதி
நம் இருவருக்குமான விவாக பந்தத்தை
முடிச்சிட்டான் இறைவன் அக்கணமே…
எங்கோ பிறந்த நீயும்
எங்கோ பிறந்த நானும்
வாழ்வில் ஒன்று சேருவோம் என எண்ணினோமா?...
காதல் என்னும் பூங்காற்று எனைத் தீண்டும் வரை
நானும் கூட நம் பந்தத்தை உணரவில்லையே…
அந்தக் காதல் கூட எனை சேர எத்தனை காலம் பிடித்தது?...
நீதான் என்னவன் என்ற உண்மையை
எனக்கு உணர்த்தியது கூட கடவுள் தானே…
உண்மையில் கடவுளை விட ஓர் புத்திசாலி உலகில் உண்டா?...
இரண்டு எல்லையில் இருந்த நம் இருவரையும்
ஓர் எல்லைக்குள் கொண்டு வந்து விட்டுவிட்டானே…
என்ன விந்தை பார்த்தாயா?...
உன்னைப் பார்க்கும் வரையில் காதல் எனக்குள் இல்லை…
உன்னைப் பார்த்த பின்பு நானே என்னில் இல்லை…
மொத்தமாய் உன் வசம் வந்த நிலை தனை
எப்படியடா உனக்கு நான் உரைத்திடுவேன்?...
என்ன வார்த்தை கொண்டு அதனை நிரப்பிடுவேன்?...
சொன்னாலும் என் உணர்வுகள் உனக்கு புரிந்திடுமா?...
என் மனம் தவித்திடும் தவிப்பும் உனக்கு புரிந்திடுமா?...
தெரியவில்லையேடா…
தனியே இருந்த என் இதயக்கூட்டில்,
உனையும் இணைத்து உலவவிட்டு விட்டானே இறைவன்!!!...
அவன் சேர்த்த பந்தம்…
அவன் போட்ட முடிச்சு…
அவன் இணைத்த உறவு…
நீதான் என்பதில் எத்தனை உவகை தெரியுமா எனக்கு?...
அந்த சந்தோஷத்தை விவரிக்க தெரியவில்லையடா….
உள்ளத்தின் உணர்வுகள் அலையென என்னுள் எழ,
வானோடு ஒட்டிக்கொண்ட நீராய் ஆர்ப்பரிக்கிறேன் நானும்…
உன் மௌனக் காதல் கடலில்!!!!…
பூ மலரும்…
{kunena_discuss:1088}