அவளின் டைரியில் - மீரா ராம்
25. விந்தையாக இல்லை உனக்கே இது…
மாதத்தின் கடைசி நாள் இன்று…
என் வாழ்வின் இறுதி நாளும் இன்றே முடியாதோ?...
பகலில் வேலை நேரத்தில் உன் முகம் வந்து போகிறது…
இரவில் உறக்க நேரத்தில் உன் கண்கள் தோன்றுகிறது…
தூங்கும் நிலையிலும் உன்னை மறக்கக்கூடாதென
அப்போதும் என் கண்ணுக்குள் உன்னை ஊற்றிச்செல்லும்
மாயமென்ன கண்ணனே…. சொல் மாயவனே…
உன் உதடுகள் என்னிடம் பொய் சொல்லியிருந்தாலும்
உன் விழிகள் என்னிடம் பொய் சொல்லவில்லையே…
அந்த மயக்கும் விழிகளில் காதல் நிரம்பி வழியக் கண்டேனே…
கனிவுடன் அன்பும் சேர்த்துக் காட்டியதே…
மெய்தானே உன் விழிகள் பேசிய கதைகள்…
உன் பார்வை தான் முதல் சலனம் என்னில் உண்டாக்கியது…
உன்னில் தொலைந்ததும் அதனால் தான்…
உன் அக்கறை, பாசம், நேசம், அன்பு, உரிமை, கோபம்,
சீண்டல், கொஞ்சல், மிஞ்சல், மிரட்டல், அரவணைப்பு
அத்தனையும் தான் உன் மேல் காதல் கொள்ள
என்னைத் தூண்டிய ஆயுதங்கள்…
காதலில் விழ வைத்தது நீ…
பார்வையில் மயக்கியது நீ…
அன்பில் திளைக்க வைத்தது நீ…
உரிமையில் நிரப்பியது நீ…
செய்தது எல்லாமே நீ….
பழி மட்டும் என் மேல்…
விந்தையாக இல்லை உனக்கே இது….
{kunena_discuss:784}