அவளின் டைரியில் - மீரா ராம்
30. கானல் நீர் என்றும் கை சேராதென
இன்னார்க்கு இன்னார் என கடவுள் எழுதி வைத்ததே
உறுதியானது…. நிலையானது… இறுதியானதும் கூட….
அவர் உன்னுடன் என் பெயரை எழுதவில்லை…
அது எனக்கு எப்போதோ புரிந்தும் உன்னை
நினைத்து துடித்து ஏங்கி நின்றேன் எந்நாளும்…
இனியும் துடிப்பதில் அர்த்தம் இல்லை சிறிதும்…
நான் உன்னை நினைத்து உனக்காக உருகினேன்…
நீ அவளுக்காக உருகி கரைந்து போகின்றாய்…
நாளை அவள் சம்மதம் கிடைத்தால் உனக்காக
உன் காதலுக்காக அவள் உருகி காணாமல் போவாள்…
ஆனால் என் நிலைமை???
காலமெல்லாம் நான் தான் உன் மேல், பிறர் மேல்
அன்பாய், பாசமாய், இருப்பேனே தவிர,
என் மேல் அக்கறை காட்ட,
உருகி என்னை அன்புடன் பார்த்துக்கொள்ள
என் பெற்றோரையும், நண்பர்களையும் தவிர?...
யார் இருக்கிறார்கள் எனக்கு?...
அவர்கள் அமைத்துத் தரும் வாழ்க்கைத்துணை
மட்டுமே இனி எனக்கு நிரந்தரம்…
நானும் மனுஷி தான்… எனக்கும் சில ஏக்கங்கள்,
எதிர்பார்ப்புகள், கற்பனைகள் உண்டு சிறிதளவேனும்…
எனக்கே எனக்கென ஓர் உறவு வேண்டும்…
அது நீயாய் இருக்குமென நினைத்து ஏமாந்து போனேன்…
இப்போது தான் தெரிகிறது…
கானல் நீர் என்றும் கைசேராதென…
{kunena_discuss:784}