18. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்
சிவக்க வைக்கிறாயே ஏனடா?!!!…
உடலை ஊடுருவிச் செல்லும் ஊதக்காற்று எனை சிலிர்க்க வைக்க
சட்டென இதழ்களில் வந்து நின்றாய் நீ….
மனதிற்கு பிடித்த பாடலொன்றை நானும் முணுமுணுக்க,
இதயத்தில் உன் அரங்கேற்றம் இனிதே ஆரம்பித்தது நடனத்துடிப்பாய்…
முழங்கால்களை மடித்து அதில் இருகையையும் சேர்த்து பிடித்திருந்தவள்
மெல்ல ஒரு கையை மட்டும் கன்னத்தில் வைத்து சிரித்துக்கொண்டேன் தானாக…
என்ன நினைத்தேன்?... எதற்காக சிரித்தேன்?...
தெரியவில்லை…
சரி போகட்டும் என்று சுற்றிலும் இருந்த பூக்களை பார்க்கையில்
மலர்ந்து விகசித்தது உன் முகம் எனக்குள்…
கன்னத்தில் இருந்த கை இப்போது தலைக்கு மாற,
ஐயோ என்னடா செய்கிறாய் என்னை?... உள்ளமும் கூப்பாடு போட
ஓயாத ஒன்றாய் என்னை பின்தொடர்ந்தது புன்னகையும்…
சரிதான் என எண்ணியவள் அருகிலிருந்த தூணில்
மெல்ல தலை சாய்த்து கண் மூடியது தான் தாமதம் என்பதுபோல்,
காதோரம் உன் மூச்சுக்காற்று எனைத் தீண்ட
திடுக்கிடலுடன் கண் விழித்தேன் நானும் அவசரமாய்…
அக்கம் பக்கம் சுற்றி பார்வையை சுழலவிட்டவள்
எங்கும் நீ இல்லாதது கண்டு என்னை நானே
அடித்துக்கொண்டேன் தலையில் செல்லமாய்…
லூசு… என்ன நினைவில் இருக்கிறாய் நீ?...
சும்மா சும்மா சிரிக்கிறாய்…
இப்படியே போனாய் என்றால் உன்னை பைத்தியம் என்று
அழைத்திடுவார்கள், ஜாக்கிரதை…
மனம் எச்சரிக்க, அதை அலட்சியம் செய்தவளாய்
முழங்கால்களின் மேல் இருகரம் சேர்த்து
அதில் என் கன்னத்தினையும் வைத்து படுத்திட,
என் நாசி குறுகுறுக்க ஆரம்பித்தது திடீரென…
என்னவாக இருக்கும் என்றெண்ணி நானும் பார்த்திட,
கள்ளச்சிரிப்புடன் என் முகத்தின் அருகே நிற்கிறாய் நீ
வசீகரம் நிறைந்து பொங்கி வழிய…
இதழ்கள் தானாகவே விரிந்து உனை வரவேற்க,
உன் சுவாசச்சூடு என் கன்னம் தொட்ட வேளை
உன் கூர்நாசி என் நாசியை உரசி விளையாடியது மெல்ல…
ஹ்ம்ம் என்ற சிணுங்கலுடன் நான் சற்றே விலக
நீயும் சிரித்து வைத்தாய் எனை பார்த்து…
உன்னை…………… என்ற பொய்க்கோபத்துடன்
உன்னை நோக்கி கைகளை நீட்டி, நான் பிடிக்க முயல
மாயமாய் மறைந்து போனாய் நீயும் புகையென…
கனவா?.... என்று வாய்திறந்து சொல்லியவளின்
அதரங்களில் கீற்றுப்புன்னகை உதித்தது மீண்டும் சட்டென…
நொடிக்கு நொடி எனை புன்னகைக்க வைக்கும்
என் அழகு செல்லக்கண்ணா…
உனக்கே இது நியாயமாய் படுகிறதாடா?...
எப்போதும் உன் நினைவில் என்னை கட்டிப்போட்டுக்கொள்கிறாய்…
அது போதாதென்று அனுக்ஷணமும் இப்படி
என்னை சிவக்க வைக்கிறாயே ஏனடா?... என் ராஜா!!!...
பூ மலரும்……….
{kunena_discuss:779}