கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 27 - மனதில் தவழ்கிறதே ஏனடா???….!!!… - மீரா ராம்
நெஞ்சில் உந்தன் முகம் வந்து வந்து போக
வஞ்சி இவளும் முகம் மலர்கிறாள் இனிதே…
செவியில் உந்தன் குரல் சட்டென கேட்க
வழியில் இவளும் கவனம் பதிக்கிறாள் உடனே…
நாசி உந்தன் வாசம் முழுதும் உணர
தூசி போல் இவளும் தொலைகிறாள் அக்கணமே…
கரங்கள் உந்தன் பிம்பம் வரைய ஆரம்பிக்க, அது
வரங்கள் என இவளும் மகிழ்கிறாள் அந்நொடியிலே…
எண்ணம் உந்தன் நினைவு கொண்டிட
வண்ணம் இவளும் தீட்டுகிறாள் உன்னுடனே கனவில்…
பகலிலும் இரவிலும் இடைவிடாது தோன்றிடும்
உன் நியாபக அலைகளுக்கு ஓய்வென்பதே
நான் கொடுத்ததில்லை ஏனோ இன்று வரை...
என்னை நோக்கி பெரும் சத்தத்துடன் வரும்
அலையில் மூழ்கி காணாது போகவே
துடித்திடும் இவளின் ஆசையை என்னவென்று கூறிடுவாய் நீ?...
பைத்தியக்காரத்தனம் என்றா?... இல்லை இதற்கு
வைத்தியக்காரர்களே இல்லை என்றா?...
என்னவென்றாலும் சொல்லிக்கொள்….
நான் கண்ட காதல் பிணிக்கு ஏற்ற அருமருந்தை
என் கண்ணார கண்டபின் இனி எதற்கு கவலை?...
ஆம்… நோய் தீர சிகிச்சை அளிப்பவனும் நீயே….
அதை மாயமாய் மறைய செய்திடும் மருந்தும் நீயே…
என்னில் நான் ஆயிரம் கவலைகள் கொண்டாலும்
உன் ஒற்றை கண் சிமிட்டல் போதும்
அத்தனையையும் நொடிப்பொழுதில் போக்கிட…
“சகி… நான் உங்கூடவே தாண்டா இருக்குறேன்…”
என்ற உனது ஆறுதலான ஓர் வார்த்தை போதும்
எத்தனை பெரிய பிரச்சினைகளையும் நான் எதிர்கொண்டிட…
என்னுடனே மனதில் நிறைந்திருக்கும் என் அழகு கண்ணனே…
சில நேரத்தில் உன்னையும் தேட வைத்திடுகையில்
என் செல்லக் கள்வனுக்கு நிகர் யாருமே இல்லை இங்கே…
“அழகனடா நீ…..” என்று உன்னைக் கொஞ்சிடுகையில்
இனம் புரியா சந்தோஷம் மனதில் தவழ்கிறதே ஏனடா?... என் ராஜா!!!
பூ மலரும்……….
{kunena_discuss:1088}