கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 36 - எப்படி சொல்வேனடா?...!! - மீரா ராம்
உள்ளத்தில் வைத்திருக்கிறேன் கோடி ஆசை…
அதை கொட்டி தீர்த்திட ஓர் நொடியும் போதும்…
எனினும் என் மனதில் அமைதி குடிகொள்ளுவது ஏன்?...
எத்தனையோ முறை எனக்குள் எண்ணியதும் உண்டு…
உன் முகம் நான் பார்க்கும் தருவாயில்
ஆசை அனைத்தும் என் விழி வழியே வழிய விழைய
நீ அதனைக் கண்டு விடாதவாறு
வேறு திசையில் உன்னை திசை திருப்பிவிடுவதும்,
நீ அங்கே ஏதோ இருக்கிறது என்றெண்ணி
உன்னிப்பாக அதனை கவனித்திடும் நொடியில்
உன் முகத்தினை இங்கு நான் ரசித்திடுவேன்
என் ஆசைகள் அனைத்தினையும் விழியில் கொண்டு வந்து…
அலைபாயும் கேசம்…
அதில் என் விரல்களை கோர்த்து கலைத்திட்டால் என்ன செய்வாய்?...
சின்னதான பிறை நெற்றி…
அதில் என் நெற்றி வைத்து முட்டிக்கொண்டால் என்ன செய்வாய்?...
குறுகுறுவென பார்க்கும் உன் விழிகள்…
அதில் நான் மௌனமாய் தொலைந்து போகையில் என்ன செய்வாய்?...
என்னை உரச காத்திருக்கும் நாசி….
அதில் நான் என் மூக்கை வைத்து உரசிக்கொண்டால் என்ன செய்வாய்?...
பார்த்ததும் கிள்ளிக்கொள்ள எண்ணம் கொடுக்கும் உன் கன்னம்…
அதில் என் இரண்டு விரல் வைத்து பட்டும் படாமல் தொட்டுக்கொண்டால் என்ன செய்வாய்?...
என்னை கவர்ந்திழுக்கும் உன் கற்றை மீசை…
அதற்கும் கீழே உன் மலரிதழ்கள்…
நான் உன்னில் மூழ்கிக்கொண்டிருக்கையில்
“ஹேய்… அங்கே என்ன இருக்குடி?...” என
சட்டென நீயும் திரும்பி பார்த்திட
உன் பார்வை என் மீதும்,
ஏதோ சொல்லிக்கொண்டிருந்த உன் இதழ் சற்றே குவிந்தும் நிற்க,
அதிர்ச்சியில் உறைந்தவளாய் நான்…
படபடக்கும் இதயத்துடன் என் விரல்நகத்தினை ஆராய்ந்திட
கள்ளன் நீயும் கண்டுகொள்வாய் என் எண்ணங்களை….
புன்சிரிப்புடன் விரிந்து கொடுக்கும் உன் அதரங்கள்…
மெதுவாய் கேசம் கோதிடும் உன் விரல்கள்…
என்னையே துளைத்தெடுத்திடும் உன் விழிகள்…
அய்யோ… என்னால் நிமிர்ந்து கூட பார்த்திட முடியாதடா கண்ணா…
நாணமா?... இல்லை பயமா?...
இனம் பிரித்து சொல்லிட முடியாது
தவித்து நான் அங்கே நிற்கும் நிலையினை
எப்படி சொல்வேனடா???..... என் ராஜா!!!!....
பூ மலரும்……….
{kunena_discuss:1088}