கவிதை - நினைவெனும் மகரந்தம் - புவனேஸ்வரி
இல்லை இல்லை!
நீ என்ற ஒருவனை நான் கண்டதே இல்லை!
உயிர்வருடும் உன் கணீர் குரலை இதுவரை கேட்டதில்லை!
உன் தமிழ் போதையில் நீ கசிந்த கவிதைகளை ரசித்ததில்லை!
மௌனத்தின் பேரழகு நீதான் என உணர்ந்ததில்லை!
பொன்னைவிட விலையுயர்ந்தது உன் வார்த்தை என கணக்கிட்டதில்லை!
கண்ணைவிட அதிமுக்கிய பாகம் என்னில் நீயென கருதியதில்லை!
விண்ணை விட உயர்ந்தவன் நீ என வியந்ததில்லை!
என்னைவிட எனக்கு அவசியமானவன் நீ என நினைத்ததில்லை!
என்னவனே,
இப்படித்தான் நீ என்ற ஒருவனை
கண்டதே இல்லாதது போல என்னை நானே ஏமாற்றப் பார்க்கிறேன்!
எல்லா சூழலிலும் சின்ன சிரிப்புடன் கடந்திட ஆசைப்படுகிறேன்!
என் நினைவெனும் ஏட்டினில் நீ நழுவி ஓடிவிட
அதை அறியாத பட்டாம்பூச்சியென இருந்திட ஆசைத்தான் எனக்கும்!
உன் நினைவுகள் மட்டும் என்னில் மகரந்தம்போல ஒட்டிக்கொள்ளாமல் இருந்திருந்தால்!
{kunena_discuss:779}