கவிதை - என்றும் இல்லை இந்நொடியடா - ரம்யா
ஏற்றம் பெறும் இறக்கம் பெறும்
இராட்டினம் தான் வாழ்வடா
இதில் ஏழை என்றும் ஏகன் என்றும்
பாழும் நினைப்பும் ஏனடா
எந்த வாழ்வும் நிலையில் இல்லை
உன் நொடியே உனது இங்கடா
இரவல்தான் பெற்றுவந்தோம்
இதில் அகந்தை இங்கு ஏனடா
வீடு மனைதோட்டம் துரவு
எதுவும் சொத்து இல்லை பாரடா
உறக்கம் விழித்து உயிர்ப்புபெற்றல்
ஒன்றே இங்கு வாழ்பவர்க்கு மெய்யடா
ஆதி இன்றி அந்தம் இன்றி
இயங்கும் ஒன்று உண்டடா
அதன் நிலையை கூவும் வெறும்
வார்த்தை போர்கள் இங்கு வீணடா
கடந்து வந்த பாதை சுமையை
இளப்பாற இறக்கி வையடா
நாளை கனவில் வாழ்வுமாறும்
நினைவுகள் மெல்ல களையடா
இன்று இங்கு இயல்பாய் வாழும்
முறைமைகளை தெளிந்து கல்லடா
இதுவும் கடந்து போனால் வாழ்வில்
என்றும் இல்லை இந்நொடியடா