கவிதை - என்னவென்று சொல்வதம்மா - ஜெப மலர்
பத்து ரூபாய் கத்தரிக்காய்க்கு
பாட்டியிடம் பேரம் பேசும் மானிடா...
ஐந்து ரூபாய் தேநீரை ஐம்பது ரூபாய்க்கு குடிக்கிறாயே..
எங்கே போனது உனது பேரம்...
தெருத்தெருவாய் கூவி கூவி விற்பவனை
தெனாவெட்டாக பார்த்து விட்டு
கார்ப்பரேட்டின் பாக்கெட் பொருளை
காசு பார்க்காமல் வாங்குகிறாயே
எங்கே போனது உனது ஆராய்ச்சி பார்வை...
இதுல ஆரோக்கியம் இதுல அபார சக்தி கிடைக்கும் என்று
விளம்பரம் பார்த்து அள்ளி குவிக்கிறாயே...
நலனைக் காக்கும் நவ தானியங்களை
குப்பையாய் வெளியே கொட்டுகிறாயே...
ஆள் வளர வளர அறிவு வளராமல்
ஆண்டு வரும் கார்ப்பரேட் அல்லவா வளர்கிறது..
உயிரோடு சாகிறான் ஏழை விவசாயி
உயிரை எடுத்து செல்வம் பெருக்குகிறான் சுயநலவாதி...
யார் உணர்வார் இங்கே
யார் வெல்வார் இங்கே
சேமிக்கும் பணத்தை கொண்டு
பாதி வயிறு நிரப்ப முடியுமா?
அடிபணிய வைக்கும் அதிகாரம் கொண்டு
தொண்டை குழியை நனைக்க முடியுமா?
உண்மை நிலை நீ அறியும் போது
உயிர் உன் உடலில் இருக்குமா?
காலம் தான் பதிலளிக்க முடியும்
காலம் தாழ்த்தினாலும் விடை கூறியே தீரும்...