கவிதை - நியாபகம் - கார்த்திக் கவிஸ்ரீ
தூங்கி எழுந்ததும் சூரியனை தொழுத காலம்,
வேப்பங்குச்சியில் பல் துலக்கிய காலம்,
ஆற்றில் குதித்தும், நீந்தியும் குளித்த காலம்,
மடிப்பு கசங்கிய சட்டையுடன்,
பள்ளியில் நண்பர்களுடன் சேட்டை செய்த காலம்,
அனைவரும் ஒன்றாய் அமர்ந்து மதிய உணவு உண்ட காலம்,
பாண்டி, நொண்டி, பச்சகுதிரை, நுங்கு வண்டி, ஐந்குகல் ஆட்டம் ஆடிய காலம்,
மாலை பொழுது மறையும் வேளையில்,
பொண்வண்டை பிடித்து தீப்பெட்டியில் அடைத்த காலம்,
பாயில் படுத்து கொண்டு கூரை ஓட்டை வழியே,
நிலா வெளிச்சத்தை கையில் பிடித்த காலம்,
பாட்டி சொன்ன கதைக்கு ஊ சொல்லி கொண்டே உறங்கிய காலம்,
இப்போது வேலை பளு அதிகம் இருந்தும், உடல் சலுப்புகள் அதிகம் இருந்தும்,
குளு குளு ஏசி அறையில், மெது மெது போன்ற படுக்கையில் படுத்தும்,
உறக்கம் இன்றி மாத்திரை போட வேண்டிய நிலையில் நம் வாழ்க்கை,
தூக்கமின்றி தவிக்கும் போதெல்லாம்,
சாரல் மழைபோல் மனதிற்குள் கிராமத்து வாழ்க்கை....