கவிதை - தீண்டாமை இனியும் நமக்குள் வேண்டாமே!!! - கார்த்திக் கவிஸ்ரீ
பிறந்த நாள் முதலே வறுமையினால் ஒதுக்கப்பட்டேன்,
சாதி,மதம் என்னும் நோயினால் தள்ளிவைக்கப்பட்டேன்,
வளம் மிகுந்த குரல் இருந்தும் மௌனமே எனக்கு கிடைத்த வாய்ப்பு,
பாதையில் எதிரே நடக்க முட்டுக்கட்டை,
பசிக்கும் போது பந்தி கிடைக்காமல்,
கடைசியில் மிச்சம்மீதியை உண்ண கொடுத்த சமுதாயம்,
வயது குறைந்தவரையும் வணங்க சொல்லும் அடிமைத்தனம்,
சுதந்திரம் எனும் வார்த்தையை கூட சுதந்திரமாக சொல்ல முடியவில்லையே,
இவைகள் தான் எனக்கென எழுதப்படாத சட்டமோ??
பிறப்பும் சமம், இறப்பும் சமம்,
இதற்கிடையே மனிதர்களின் மனதில் ஏன் பல வேறுபாடுகள்,
வாழும் உயிருக்கு மதிப்பளிக்காமல்,
கண்ணுக்கு தெரியாத சாதிகளுக்கு மதிப்பளிக்கிறோம்,
மனிதர்களிடத்தில் வேற்றுமையையும்,
ஐந்தறிவு படைத்த விலங்குகளுடன் இணக்கத்தையும் கொள்ளும் நாம்,
ஆறரிவு படைத்த மிருகமாய் வாழ்கிறோம்,
சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லித்தரும் பள்ளியில் கூட,
சாதியை படிவத்தில் பூர்த்தி செய்த பின்னரே பள்ளியில் சேர்க்கப்படுகிறோம்,
வளரும் பிள்ளைகளின் மனதில் நல்லெண்ணத்தை விதைத்தால்,
சமத்துவம் என்னும் பசுமை காடு வளரத்தொடங்கும்,
வேற்றுமை மறந்து ஒற்றுமையாய் வாழ்வோம்!!!