கவிதை - விலகட்டும் துயரம் - இரா.இராம்கி
விலகட்டும் உங்கள் வாழ்வின்
பெருந்துயரம்;
இனி அடையட்டும் உங்கள் வாழ்வு,
பெரும் உயரம்;
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போனது உழவனின் தேகம்;
உலகிற்கே உணவூட்டும் உழவனுக்கு
இனி கிடைக்கட்டும் உழைப்பிற்கேற்ற உயர்ந்ததோர் ஊதியம்;
நெய்தல் நில நாயகம்!
நெடுநாட்கள் கூட, நின் மீன்பிடி படகு ஆழ்கடலில் தங்கும்;
உன் வாழ்வில்,
தினம் நிகழும் பல போராட்டம்,
இனியாவது நாளும் வீசட்டும் வசந்தம்;
இயந்திரங்கள் வந்த பின்னும்
உனதிருகைகள் நெசவு செய்யும்;
உனதுழைப்பு ஆடையாய் எங்களுடல் தழுவி, மானம் காக்கும்;
உனதுழைப்பை உறிஞ்சும் போக்கு ஒழியட்டும்,உன் வாழ்வில் இனி வண்ணங்கள் மிளிரட்டும்;
கட்டிடத்தொழில் செய்வோர்தம் உழைப்பெனும் பலமான அஸ்திவாரம்-அது, நாம் வசிப்பதற்கு நல்குதே நல்லதோர் உறைவிடம்;
உம் உழைப்பெனும் தூலியில் அனைவருக்கும் கிட்டும் தூக்கம்;
உம் தினக்கூலி உயர்ந்து
பகலவன் கண்ட பனி போல், விலகட்டும் உமது துயரம்.
உணவு உடை உறைவிடம்,
நம் வாழ்வில் வேறென்ன வேண்டும்;
வாழ்வின் மிகக்கடின காலங்கள்
இதை நமக்கு நன்றாகவே உணர்த்தும்;
உலகிற்கு அடிப்படைத் தேவை நல்கும்
உங்கள் வாழ்வில் விலகட்டும் துயரம்;
இனி உங்கள் வாழ்வு,
ஏற்றம் காண வேண்டும்
அந்த இமயத்தின் உயரம்;
உண்மையாய் உழைக்கும் மக்கள் யாவரது வாழ்விலும்,
மடியட்டும் துயரம்;
இனி அவர்கள் வாழ்வு
அடையட்டும்
புதியதோர் சிகரம்.