கவிதை - லைக்குகள்! - கிருஷ்ண பச்சமுத்து
உங்கள் காமிரா,
உங்களுக்கும்
பார்ப்பவர்களுக்கும்
இடையில் நுழைந்து,
பார்ப்பவர்களை
மறையவைத்து
உங்களை அவர்கள்
திரையில்
நிரந்தரமாக்குகிறது!
கோடி கண்கள்
ஒளிந்திருக்கிறது
உங்கள் காமிராவில்!
அனுமதி தருவது, நீங்கள்!
காட்சியாவது, நீங்கள்!
காட்சிப்படுத்துவது, நீங்கள்!
மாய லைக்குகளில்
திளைப்பது, நீங்கள்!
அதே நேரம்,
அழுது தீர்ப்பதும் நீங்கள்தான்!
நினைவில் கொள்!
தீய சமூகமிது!
தானென்ற எல்லைக் கடந்து,
நலம் பேணுபவர்கள்
மிக மிக குறைவு!
சாலை நடுவே
அனைவரும் நல்லவர்கள்!
நாற்சுவருக்கு நடுவே
அனைவரும் கெட்டவர்கள்!
மறைந்துகொண்டால்,
எதையும் செய்ய
வாய்ப்பு வழங்கும்
சமூகமிது!
லைக்குக்காக எதையும்
செய்யலாமா?
மேடையும்
செல்போன் காமிராவும்
ஒன்றா?
மேடையில் காணும் கண்கள்
நமக்கு தெரிவனவாய் இருக்கும்!
நம் காட்சியின் விளைவை
நாமே அறியலாம்!
செல்போன் காமிராவின் விளைவு
லைக்குகளிலும் ட்ரெண்டிங்கிலும்
காண்கிறோம்!
லைக்குகளும் ட்ரெண்டிங்கும்
ஓரிரவில் நிகழ்வதிலேயே
தெரிந்துவிடும் அதன்
நிலைப்புத்தன்மை!
திடீர் உயரம்
பாதுகாப்பானதன்று!
உயரப் பறப்பதாய்
நினைத்தவர்கள்,
காணமற் போவதை யாரும்
கண்காணிப்பதில்லை!
லைக்குகள் பாராட்டுக்களே!
டிரெண்டிங் சாத்தியமே!
நிலைக்க வேண்டுமெனில்,
திறமைகள் தனித்துவமானதாய்
உங்களிடமிருந்து பறிக்கப்படாததாய்
இருத்தல் வேண்டும்!
கழுகாய் இருந்தால்
எவ்வளவு உயரமும்
எட்டலாம்!
சிறகை விரிக்கும்முன்,
நீங்கள் கழுகா என்பதை
சோதித்துக்கொள்ளுங்கள்!