பிரியாவை பற்றி பேசிய மனைவியிடம் நந்தகோபாலன்
"ஒருத்தங்களை பத்தி முழுசா தெரியாம அவங்க மேல பழி சுமத்தக்கூடாது அகல்யா" என்றவர் குரலில் சற்றே கடுமை ஏறி இருந்தது.
"அவளால தான இவன் வெளிநாடு போனான். எங்க இல்லனு சொல்லுங்க பார்ப்போம்....."
அகல்யா தன் மகனை பிரிந்திருந்த நாட்களை எண்ணி வருந்த அதன் தாக்கமே கோபமாய் வெளிப்படுகிறது என்பதை நந்தகோபாலன் நன்றாகவே உணர்ந்திருந்தார்.
"என்னைக்கு இருந்தாலும் அவ நம்ம வீட்டுக்கு வர போற பொண்ணு மா.... அவளை நீயும் முழுசா புரிஞ்சிக்க.. குடும்பம்னா என்ன, எல்லார்கிட்டயும் எப்படி பழகணும், எங்க எப்படி நடந்துக்கனும்னு எல்லாமே அவளுக்கு ஒரு அம்மாவா இருந்து நீ தான் எடுத்து சொல்லணும்" என்று அவரும் தன்மையாய் தன் மனைவியிடம் எடுத்துக்கூற....
"போதும்... இப்போ எதுக்கு அந்த பேச்சு லாம்…. அது நடக்கும் போது பார்த்துக்கலாம்."
"ஏன் டி நீ தான ஆரம்பிச்சது... இப்போ என்னை சொல்ற…"
"சரி அதை விடுங்க மாமா.... வானதிக்கு சுகமா பிரசவம் நடந்துடும்ல? அந்த புள்ளையும் பாவம் இந்த வயசுலயே படக்கூடாத கஷ்டத்தைலாம் அனுபவச்சுடுச்சு. இனிமேலும் அந்த பிள்ளைக்கு எந்த கஷ்டமும் வர கூடாது மாமா" என்று தாய்மை தழைத்தோங்க தன் நெஞ்சில் சாய்ந்து பேசிய மனைவியிடம் என்ன கூறுவது என்பது அவருக்கும் தெரியவில்லை. பாவம் அவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை, இனி வானதி என்ற ஒரு ஜீவன் இல்லை என்று.
நந்தன் பிரியாவை பற்றியும் அவளுக்கு வானதியுடனான உறவை பற்றியும் தன் தாய் தந்தையரிடம் முதலிலிருந்தே அனைத்தையும் கூறியிருந்தான். கண்களை மூடி தன் மனைவியின் கேசத்தை ஆறுதலாய் அவர் வருடிக்கொடுக்க…. இரவு வெகு நேரம் ஆனதாலோ என்னவோ இருவரையும் அதே நிலையில் நித்திரா தேவி தழுவிக்கொண்டாள்.