"என் வாழ்க்கைல எதையுமே நான் செலக்ட் பண்ண கூடாதா.... எல்லாமே நீங்க சொல்றபடி தான் நடக்கனுமா...." என்ற பிரியாவின் கேள்வியில் திடுக்கிட்டவன் சட்டென காரை நிறுத்தி இருந்தான்.
"நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் இவ என்ன கேக்குறா.... பயங்கர கோபத்துல இருக்கா போலவே.... நாம இங்க எதை சொன்னாலும் நமக்கே தெரியாமல் வேற ஒரு அர்த்தத்தில் இவ பேசுவா போல.... வேண்டாம் டா நந்து.... வாய கொடுத்து வம்புல மாட்டிக்காத.... கொஞ்சம் விட்டு பிடிப்போம்...." என்று வண்டியை நிறுத்திவிட்டு தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தான் நந்தன்.
தான் கேட்ட கேள்விக்கு எந்த எதிர்வினையுமின்றி தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருப்பவனை ஓரப்பார்வை பார்த்தவள் "ஹாஸ்பிடல் க்கு லேட் ஆகுது காரை ஸ்டார்ட் பண்ணுங்க" என்று பேச அதில் நடப்பிற்கு வந்தவன் "நல்ல வேளை வேற எதுவும் கேட்கலை..." என்று நினைத்து பெருமூச்சு விட்டவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
அவள் கேட்ட கேள்விக்கு நந்தன் பதில் சொல்லவில்லை, அவனின் பதிலை அவள் மனம் எதிர்பார்க்கவுமில்லை. இரண்டு நாட்களாய் அவன் சொற்படியே ஒரு பொம்மையை போல் தான் இருப்பதாகவே அவள் உணர்ந்தாள். அதன் வெளிப்பாடே அந்த கேள்வியும் இந்த கோபமும். பத்து நிமிடத்தில் இருவரும் மருத்துவமனையை அடைந்திருந்தனர். அவளுக்கான பணி நியமன ஆணையை வழங்கி முதல் இரண்டு மாதங்களுக்கு, மூத்த மருத்துவரான மனோகரனிடம் பயிற்சி பெற நியமித்திருந்தான்.
தன் பணியை தொடங்கும் முன் வானதியின் மகவை காணவேண்டும் என ப்ரியா கேட்க இருவரும் சேர்ந்தே சென்றனர். முகசாயலில் வானதியை போன்றே இருந்தது அந்த சிறு மழலை. ரோஜா பூ நிறத்தில், குண்டு கன்னங்களுடன், குட்டி, குட்டி உறுப்புகளுடன் ஒரு பொம்மை போலே இருந்தான் குட்டி கண்ணன். மழலையோ உறங்கிக்கொண்டிருக்க அதன் சொப்பு உதடுகளோ பாலுக்காக தவித்துக்கொண்டிருந்தது.