(Reading time: 10 - 20 minutes)
Aariloru pangu
Aariloru pangu

Flexi Classics தொடர்கதை - ஆறிலொரு பங்கு - 01 - சுப்ரமணிய பாரதியார்

மீனாம்பாள் வீணை வாசிப்பதிலே ஸரஸ்வதிக்கு நிகரானவள், புரசபாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அவள் வரும் சமயங்களி லெல்லாம் மேல் மாடத்து அறையை அவளுடைய உபயோகத்துக்காக 'காலி' செய்து விட்டுவிடுவது வழக்கம். நிலாக் காலங்களில் இரவு எட்டு மணிக்கெல்லாம் எங்கள் வீட்டில் போஜனம் முடிந்துவிடும். ஒன்பது மணி முதல் நடுநிசி வரை அவள் தனது அறையிலிருந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பாள்.

அறைக்கடுத்த வெளிப்புறத்திலே பந்தரில் அவளுடைய தகப்பனார் ராவ்பகதூர் சுந்தர ராஜூலு நாயுடு கட்டிலின் மீது படுத்துக்கொண்டு சிறிது நேரம் வீணையைக் கேட்டுக்கொண்டிருந்து சீக்கிரத்தில் 'குறட்டைவிட்டு நித்திரை செய்யத் தொடங்கிவிடுவார்.

ஆனால், - மஹாராஜன் - குறட்டைச் சத்தத்தால் வீணைச் சத்தம் கேளாதபடி செய்துவிடமாட்டார். இலேசான குறட்டைதான்.

வெளிமுற்றத்தின் ஒரு ஓரத்திலே நான் மட்டும் எனது *பிரமசாரி'ப் படுக்கையைப் போட்டுக் கொண்டு படுத்திருப்பேன். வீணை நாதம் முடிவுறும் வரை என் கண்ணிமைகளைப் புளியம் பசை போட்டு ஒட்டினாலும் ஒட்டமாட்டா. மீனாம்பாளுடன் அறையிலே படுத்துக் கொள்ளும் வழக்கமுடைய எனது தங்கை இரத்தினமும் சீக்கிரம் தூங்கிப் போய் விடுவாள். கீழே எனது தாயார், தகப்பனார், அவரது மனைவி முதலிய அனைவரும் தூங்கிவிடுவார்கள். எனது தமையனார் மனைவி வயிற்றிலே சோற்றை போட்டுக் கை கழுவிக் கொண்டிருக்கும்போதே குறட்டை விட்டுக் கொண்டிருப்பாள்! இடையிடையே குழந்தைகளின் அழுகைச் சத்தம் மட்டிலும் கேட்கும்.

தமையனாருக்குக் கோட்டையில் ரெவின்யூ போர்டு ஆபீஸில் உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும், வீட்டில் இரண்டு குழந்தைகளும் 'ப்ரமோஷன்'

சந்த காலம்; நிலாப் பொழுது; நள்ளிரவு நேரம்; புரசபாக்கம் முழுதும் நித்திரையி லிருக்கும். இரண்டு ஜீவன்கள்தான் விழித்திருப்பன. நான் ஒன்று; மற்றொன்று அவள்.

கந்தர்வ ஸ்திரீகள் வீணை வாசிப்பது போல மீனாம்பாள் வாசிப்பாள். பார்ப்பதற்கும் கந்தர்வ ஸ்திரீயைப் போலவே இருப்பாள். அவளுக்கு வயது பதினாறிருக்கும். கதையை வளர்த்துக்கொண்டு ஏன் போக வேண்டும்? மன்மதன் தனது அம்பொன்றின் முனையிலே என் பிராணனைக் குத்தியெடுத்துக் கொண்டுபோய் அவள் வசம் ஒப்புவித்துவிட்டான்.

அடடா! அவளது இசை எவ்வளவு நேரம் கேட்டபோதிலும், எத்தனை நாள் கேட்டபோதிலும் தெவிட்டாது. தினந்தோறும் புதுமை தோன்றும், அவள் முகத்திலே தோன்றுவதுபோல.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.