அவளுடைய தந்தையாகிய ராவ்பகதூர் சுந்தர ராஜுலு நாயுடு எனது தாயாருக்கு ஒன்றுவிட்ட அண்ணன். தஞ்சாவூர் முதலிய பல ஜில்லாக்களில் நெடுங்காலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்த்து ஸர்க்காருக்கு நன்றாக உழைத்ததினால் "ராவ்பகதூர்” என்ற பட்டம் பெற்றவர். சுதேசீயம் தொடங்கு முன்பாகவே இவர் வேலையிலிருந்து விலகிவிட்டவர். இதை எதன் பொருட்டாகச் சொல்லுகிறே னென்றால், அவருக்குக் கிடைத்த பட்டம் வெறுமே சில சுதேசீயத் தலைவர்களின் மீது “ரிப்போர்ட்” எழுதிக் கொடுத்துச் சுலபமாகச் சம்பாதித்த பட்டமன்று. யதார்த்தத்திலேயே திறமையுடன் உழைத்ததினால் கிடைத்த பட்டம். குழந்தை முதலாகவே மீனாம்பாளை எனக்கு விவாகம் செய்து கொடுக்கவேண்டு மென்பது அவருடைய கருத்து. அந்தக் கருத்து நிறைவேறுவதற்கு நேர்ந்த விக்கினங்கள் பல. அவ் விக்கினங்களில் பெரும்பான்மையானவை என்னாலேயே உண்டாயின.
நான் சுமார் பதினாறு பிராயம் வரை சென்னைக் கிறிஸ்தியன் காலேஜில் படித்துக்கொண்டிருந்தேன். “வேதகால முதலாக, இன்றுவரை பாரத தேசத்திலுள்ள ரிஷிக ளெல்லோரும் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜுனனும், காளிதாசனும், சங்கராசாரியாரும், சிவாஜியும், ராமதாஸரும், கபீர்தாஸரும், அதற்கு முன்னும் பின்னும் நேற்றுவரையிருந்த பாரத தேசத்தா ரனைவரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திக ளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூட பக்திகள்” என்பது முதலான ஆங்கிலேய ஸத்தியங்க ளெல்லாம் என்னுள்ளத்திலே குடி புகுந்து விட்டன.
ஆனால் கிறிஸ்தவப் பாதிரி ஓர் வினோதமான ஜந்து. ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரிகத்திலும் பக்தி செலுத்துவது பேதைமை என்று ருஜுப்படுத்திக்கொண்டு வரும்போதே அவன் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்துவிடுகிறான், மத விஷயங்களைப்பற்றி விஸ்தாரமான விவகாரங்க ளெழுதிப் படிப்பவர்களுக்கு நான் தலைநோவுண்டாக்கப் போவதில்லை, சுருக்கம், நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி - ஞானஸ்நாநம் பெறவில்லை - பிரம் ஸமாஜத்திலே சேர்ந்து கொண்டேன்.
சிறிது காலத்திற்கப்பால் பட்டணத்தில் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போய், அங்கே பிரம் ஸமாஜத்தாரின் மார்க்க போதனை கற்பிக்கும் பாடசாலை யொன்றில் சேர்ந்து சில மாதங்கள் படித்தேன்: பிரம் ஸமாஜத்தாரின் உபதேசிகளி லொருவனாக வெளியேற வேண்டு மென்பது என்னுடைய நோக்கம். அப்பால் அங்கிருந்து பஞ்சாப், ஹிந்துஸ்தானம் முதலிய பல பிரதேசங்களில்