யாத்திரை செய்து கொண்டு கடைசியாகச் சென்னப்பட்டணம் வந்து சேர்ந்தேன்.
நான் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கியதாக எண்ணி எனது ஜாதியார் என்னைப் பல விதங்களில் இமிசை செய்தார்கள். இந்த இமிசைகளினால் எனது சித்த வுறுதி நாளுக்குநாள் பலமடைந்ததே யல்லாமல் எனக்கு மனச் சோர்வுண்டாகவில்லை.
எனது தகப்பனார் - இவர் பெயர் துபாஷ் ராமசந்திர நாயுடு - வெளி வேஷ மாத்திரத்தில் சாதாரண ஜனங்களின் ஆசார விவகாரங்களை வைத்துக் கொண்டிருந்தா ரெனினும், உள்ளத்தில் பிரம ஸமாஜப் பற்றுடையவர். ஆதலால், நான் வாஸ்தவமான பரமாத்ம பக்தியும், ஆத்ம விசுவாசமும், எப்போதும் உபநிஷத்துகள் படிப்பதில் சிரத்தையும் கொண்டிருப்பது கண்டு இவருக்கு அந்தரங்கத்தில் மிகுந்த உவகை யுண்டாயிற்று. வெளி நடிப்பில் என் மீது கோபம் பாராட்டுவது போலிருந்தாரே யன்றி, எனது பந்துக்கள் சொற்படி கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தவில்லை. ஸகல ஸவுகரியங்களும் எனக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக நடக்கும்படி வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.
ஆனால், எனது தமையன் மாத்திரம் என்னிடம் எக்காரணம் பற்றியோ மிகுந்த வெறுப்புப் பாராட்டினன். என் தலையிலே பஞ்சாபிகளைப் போலப் பாகை கட்டிக்கொள்வது வழக்கம். 15 ரூபாய் குமாஸ்தாக்களுக் கென்று பிரத்தியேகமான அழகு, அந்தம், ஆண்மை எதுவுமின்றி ஏற்பட்டிருக்கும் கும்பகோணத்துப் பாகை நான் கட்டிக்கொள்ளுவதில்லை. இதுகூடத் தமையனுக்குக் கோப் முண்டாக்கும். “ரஜ புத்ருடு வீடு தொங்கவிதவா! தலலோ மஹா ஆடம்பரமுக பகடி வீடி!” என்று ஏதெல்லாமோ சொல்லி ஓயாமல் திட்டிக் கொண்டிருப்பான்.
இப்படி யிருக்க, ஒரு நாள் எனது தகப்பனார் திடீரென்று வாயுக்குத்தி இறந்து போய்விட்டார். அவருக்குப் பிரம ஸமாஜ விதிப்படி கிரியைகள் நடத்த வேண்டுமென்று நான் சொன்னேன். எனது தமையன் சாதாரண ஆசாரங்களின்படிதான் நடத்த வேண்டுமென்றான்.
பிரமாத கலகங்கள் விளைந்து, நானூறு மத்தியஸ்தங்கள் நடந்தபிறகு ஸ்மசானத்தில் அவன் தனதிஷ்டப்படி கிரியைகள் நடத்தி முடிந்த பின்பு, நான் எனது கொள்கைப்படி பிரம் ஸமாஜ குரு ஒருவரை வைத்துக் கொண்டு கிரியைகள் செய்தேன். இதுவெல்லாம் எனது மாமா ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடுவுக்கு என்மீது மிகுந்த கெட்ட எண்ணம் உண்டாகும்படி செய்துவிட்டது. ஆதலால் விவாகம் தடைப்பட்டுக் கொண்டே வந்தது. ஆனால், இறுதிவரை என்னை யெப்படியேனும் சீர்திருத்தி எனக்கே தனது மகளைப் பரணிக்ரஹணம் செய்துகொடுக்க வேண்டு மென்பது அவருடைய இச்சை.
வசந்த காலம். நிலாப் பொழுது; நள்ளிரவு நேரம்; புரசபாக்கம் முழுமையும் நித்திரையி