லிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே ஒன்று நான், அவள் மற்றொன்று. இன்பமான காற்று வீசிக்கொண்டிருந்தது. மேல்மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து முறைப்படி வீணைத் தொனி கேட்டது. ஆனால், வழக்கப்படி குறட்டை கேட்கவில்லை. ராவ்பகதூர் குறட்டை. மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தனர்.
நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னுள்ளத்திலோ இரண்டு எரிமலைகள் ஒன்றை யொன்று சீறி யெதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தன. இவற்றுள்ளே ஒன்று காதல்; மற்றொன்று பின்பு தெரியவரும். வீணைத் தொனி திடீரென்று நின்றது. சிறிது நேரத்தில் எனது பின்புறத்தில் ஒரு ஆள்வந்து நிற்பதுணர்ந்து திரும்பிப் பார்த்தேன். மீனாம்பாள்!
இப்பொழுதுதான் நாங்கள் புதிதாகத் தனியிடத்திலே சந்தித்திருக்கிறோ மென்றும், அதனால் இங்கு நீண்டதோர் காதல் வர்ணனை எழுதப்படுமென்றும் படிப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம். இவ்விதமாக நாங்களிருவரும் பல முறை சந்தித்திருக்கிறோம். மீனாம்பாள் தானும் மஞ்சத்தின் மீது வீற்றிருந்தாள்,
"மீனா, இன்று உன்னிடத்தில் ஒரு விசேஷம் சொல்லப் போகிறேன்” என்றேன்.
"எனக்கு அது இன்னதென்று ஏற்கனவே தெரியும்” என்றாள்.
"என்னது? சொல்லு.”
“நீ பிரமசரிய சங்கற்பம் செய்துகொள்ளப் போகிறா யென்ற விசேஷம்."
"ஏன்? எதற்கு? எப்படி? உனக்கு யார் சொன்னார்கள்" என்று கேட்டேன்.
"வந்தே மாதரம்” என்றாள்.
மீனாம்பாளுடைய அறிவுக் கூர்மை எனக்கு முன்னமேயே தெரியு மாதலால், அவள் சொல்லியதி லிருந்து அதிக வியப்புண்டாகவில்லை! அதன்பின் நான் அவளிடம் பின்வருமாறு கூறலாயினேன்.
“ஆம். பாரத தேசத்தை இப்பொழுது பிரமசாரிகளே ரக்ஷிக்க வேண்டும். மிக உயர்ந்திருந்த நாடு. மிகவும் இழிந்து போய்விட்டது. இமயமலை யிருந்த இடத்தில் முட்செடிகளும் விஷப்பூச்சிகளும் நிறைந்த ஒரு பாழுங் காடு இருப்பதுபோலாய் விட்டது. அர்ஜுனன் வாழ்ந்த மாளிகையில் வெளவால்கள் தொங்குவது போலிருக்கிறது. இதைப் பிரமசாரிகளே, காப்பாற்ற வேண்டும்.
“பொப்பிலி ராஜாவின் மகனாகவேனும், ராஜா ஸர் ஸவலை ராமஸாமி முதலியார் மகனாகவேனும் பிறக்காமல் நம் போன்ற சாதாரணக் குடும்பங்களிலே பிறந்தவர்கள் விவாகம் செய்துகொண்டால் இந்தப் பஞ்ச நாட்டில் அவர்களுக்கு மூச்சு முட்டிப்போகிறது. குருவியின்