வாழ்க்கையிலே இத்தனை திகைப்புகள் ஏனுண்டாகின்றன?
“மறப்பு நினைப்புமாய் நின்ற - வஞ்ச - மாயா. மனத்தால் வளர்ந்தது தோழி.”
இவ்வாறிருக்கையில் ஒரு நாள் திடீரென்று எனது கையில் மீனாம்பாளின் கடிதமொன்று கிடைத்தது. அதனை இங்கு தருகின்றேன். அதைப் படித்துப் பார்த்தபோது என்னுள்ளம் என்ன பாடு பட்டிருக்கு மென்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
ஓம்.
தஞ்சாவூர்.
உடையாய்.
இக் கடிதம் எழுதத் தொடங்கும்போதே எனது நெஞ்சு பதறுகிறது. எனக்கு எப்படி யெழுதுகிறதென்று தெரியவில்லை . ஐயோ, இது என்னுடைய கடைசிக் கடிதம்! உன் முகத்தை நான் இனி இவ்வுலகத்திலே பார்க்கப் போவதில்லை.
நாயன்னா வருகிற தை மாதம் என்னை இவ்வூரில் புதிய இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் மன்னாரு என்பவனுக்குப் பலியிடவேண்டுமென்று நிச்சயம் செய்துவிட்டார். கலியாணத்துக்கு வேண்டிய சாமக்கிரியைக ளெல்லாம் தயாராகின்றன. உனது பெயரைக் கேட்டால் வேட்டை நாய் விழுவதுபோல விழுந்து காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் சொல்லி நிந்திக்கிறார். நான் தப்பியோடி விடுவேனென்று நினைத்து என்னை வெளியேறாதபடி காவல் செய்து வைத்திருக்கிறார். நீ ஒரு வேளை இச் செய்தி கேட்டு இங்கு வருவாயென்று கருதி, நீ வந்தால் வீட்டுக்கு வரமுடியாமல் செய்ய அவரும் மன்னாரென்பவனும் சேர்ந்து நீசத்தனமான ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். அவன் நாயன்னாவின் பணத்தின்மீது கண்வைத்து, இந்த விவாகத்தில் ஆசை மூண்டிருக்கிறான்.
என்னுள்ளத்திலே அவனிடம் மிகுந்த பகைமையும் அருவருப்பும் உள்ளனவென்றும், இப்படிப்பட்ட பெண்ணை பலவந்தமாகத் தாலி கட்டினால் அவனுக்கு வாழ்நாள் முழுதும் துக்கமிருக்குமே யல்லாது சுகமிராதென்றும் சொல்லி யனுப்பினேன். அதற்கு அந்த மிருகம் எனக்கு அவளுடைய உள்ளத்தைப் பற்றி லஷ்யமில்லை. அதைப் பின்னிட்டு சரிப்படுத்திக் கொள்வேன். முதலாவது, பணம் என் கையில் வந்து சேர்ந்தால், பிறகு அவள் ஓடிப்போய் அந்த ஜெயிலுக்குப் போகிற பயலுடன் சேர்ந்து கெட்டுத் திரிந்துவிட்டுப் பிறகு சமுத்திரத்தில் விழுந்து சாகட்டும்' என்று மறுமொழி கொடுத்தனுப்பிவிட்டது.
அனேக தினங்களாக எனக்கு இரவில் நித்திரை யென்பதே கிடையாது. நேற்றிரவு படுக்கையின் மீது கண்மூடாமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன். அப்போது கனவு போன்ற ஒரு தோற்றமுண்டாயிற்று. தூக்கமில்லாத பொழுது கனவெப்படி வரும்? அஃது