கனவுமில்லை , நனவுமில்லை , ஏதோ ஒருவகையான காட்சி, அதில் அதிபயங்கரமான ரூபத்துடன், இரத்தம் போன்ற செவந்த விழிகளும், கரியமேகம் போன்ற மேனியும், வெட்டுண்ட தலைகளின் மாலையும், கையில் சூலமுமாகக் காளி தேவி வந்து தோன்றினள். நான் நடுங்கிப் போய் 'மாதா, என்னைக் காத்தருள் செய்ய வேண்டும்' என்று கூறி வணங்கினேன்.
உடனே, திடீரென்று அவளுடைய உருவம் மிகவும் அழகியதாக மாறுபட்டது. அந்த சௌந்தர்யத்தை என்னால் வருணிக்கமுடியாது. அவளுடைய திருமுடியைச் சூழ்ந்து கோடி ஸுர்யப் பிரகாசம் போன்ற ஒரு தேஜோமண்டலம் காணப்பட்டது. கண்கள் அருள் மழை பொழிந்தன.
அப்பொழுது தேவி எனக்கு அபயப் பிரதானம் புரிந்து பின்வருமாறு சொல்லலாயினள்: "குழந்தாய், உனது அத்தான் கோவிந்தராஜனை எனது ஸேவையின் பொருட்டாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். உனக்கு இம்மையில் அவனைப் பெறமுடியாது. நீ பிறனுக்கு மனைவியாகவும் மாட்டாய். உனக்கு இவ் வுலகத்தில் இனி எவ்வித வாழ்வுமில்லை. உங்கள் வீட்டுக் கொல்லையில் வடமேற்கு மூலையில் தனியாக ஓர் பச்சிலை படர்ந்திருக்கக் காண்பாய். நாளைக் காலை ஸ்நாநம் செய்து பூஜை முடிந்தவுடனே அதில் இரண்டு இலைகளை எடுத்துத் தின்றுவிடு. தவறாதே", மேற்கண்டவாறு கட்டளை கொடுத்துவிட்டுப் பராசக்தி மறைந்து போயினாள்.
காலையில் எழுந்து அந்தப் பச்சிலையைப் பார்க்கப் போனேன். வானத்திலிருந்து ஒரு காகம் இறங்கிற்று. அது அந்தப் பச்சிலையைக் கொத்தி உடனே தரையில் மாண்டு விழக் கண்டேன். தேவியின் கருத்தை அறிந்து கொண்டேன். இன்று பகல் பத்து நாழிகைக்கு, அந்த இலைகளை நான் தின்று பரலோகம் சென்று விடுவேன். நின் வரவை எதிர்பார்த்து அங்கும் கன்னிகையாகவே இருப்பேன். நீ உனது தர்மங்களை நேரே நிறைவேற்றி மாதாவுக்குத் திருப்தி செய்வித்த பிறகு, அவள் உன்னை நானிருக்கு மிடம் கொண்டு சேர்ப்பாள். போய் வருகிறேன். ராஜா! ராஜா! என்னை மறக்காதே. வந்தே மாதரம்."
இக் கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டேன்.
தொடரும்...
Next episode will be published soon.