வருவதாகவும், பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங் கொண்டுபோய் பஞ்சமுள்ள ஸ்தலங்களிலிருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு, "நீரும் போய் இவ் விஷயத்தில் வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.
ஆ! - ஆ! ஆ! ராமசந்திரன் அரசு செலுத்திய நாடு! வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய நாடு! அங்கு ஜனங்கள் துணியும் சோறு மில்லாமல் பதினாயிரக் கணக்காகத் தவிக்கிறார்கள்! அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னைக் கேட்கவும் வேண்டுமா? அவர்க ளெல்லோரும் எனக்குத் தெய்வங்க ளல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்ய முடியாவிட்டால் இந்தச் சதை யுடம்பை எதன் பொருட்டாகச் சுமக்கிறேன்?. . . . . லாலாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு போய்ச் சிறிது காலம் அந்தக் கடமை செய்து கொண்டு வந்தேன். அங்கு கண்ட காட்சிகளைப் பற்றி எழுதவேண்டுமா? எழுதுகிறேன், கவனி.
தேவலோகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி! நரகத்தைப் பற்றிக் கேள்வி யுற்றிருக்கிறாயா? சரி! தேவலோகம் நரகலோகமாக மாறி யிருந்தால் எப்படித் தோன்றுமோ, அப்படித் தோன்றியது பகவான் ராமசந்திரன் ஆண்ட பூமி! நான் அங்கிருந்த கோரங்களை யெல்லாம் உன்னிடம் எதற்காக விரித்துச் சொல்ல வேண்டும்?
புண்ணிய பூமியைப் பற்றி இழிவுகள் சொல்வதினால் ஒருவேளை சிறிது பாவமுண்டாகக்கூடும். அந்தப் பாவத்தைத் தவிர வேறென்ன பயன் கிடைக்கப் போகிறது?
உன்னால் எனது தாய் நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? எழுந்திருந்து வா, பார்ப்போம்! எத்தனை நாள் இப்படி உறங்கி அழியப் போகிறீர்களோ! அட, பாப ஜாதியே, பாப ஜாதியே! ......... இது நிற்க,
ஓரிரண்டு மாதங்களுக் கப்பால், லாலா லாஜ்பத்ராய் எங்களுக்குக் கடித மெழுதி இனி அந்த வேலை போதுமென்று கட்டளை பிறப்பித்து விட்டார்!
பஞ்சந் தீர்க்கும் பொருட்டாக இவர் வாலிபர்களைச் சேர்ப்பதிலிருந்து அதிகாரிகள் ஏதேனும் சமுசயங் கொண்டு மறுபடியும் தம்மைத் தீபாந்தரம் அனுப்பி விடுவார்களோ என்ற சந்தேகத்தை யாரோ அவருடைய புத்திக்குள் நுழைத்து விட்டார்கள்.
நல்லவர்தான் பாபம்; மிகுந்த பக்தி சிரத்தை யுடையவர். தர்மாபிமானத்திலே சிறந்தவர்.
ஆனால், அவரை ஸமுசயமும், பயமும் இடைக்கிடையே வந்து கெடுத்துவிடுகின்றன. என் செய்யலாம்? சாபம், சாபம், நமது ஜாதியைப் பற்றிய சாபம், இன்னும் நன்றாகத் தெரியவில்லை.
கோசல நாட்டுப் பிரதேசங்களில் பஞ்சத்தின் சம்பந்தமாக நான் வேலை செய்த சில