மாதங்களில், ஏற்கெனவே என் மனதில் நெடுங்காலமாக வேரூன்றி யிருந்த ஒரு சிந்தனை பலங்கொண்டு வளரலாயிற்று. தணிந்த வகுப்பினரின் நன்மை தீமைகளிலே, நமது நாட்டில் உயர்ந்த வகுப்பின ரென்று கூறப்படுவோர் எவ்வளவு தூரம் அசிரத்தையும், அன்னியத் தன்மையும் பாராட்டுகிறார்க ளென்பதை நோக்கு மிடத்து எனது உள்ளத்தில் மிகுந்த தளர்ச்சி யுண்டாயிற்று. தென்னாட்டைப்போலவே வட நாட்டிலும் கடைசி வகுப்பின ரென்பதாகச் சிலர் கருதப் படுகின்றனர். தென்னாட்டைப்போலவே வட நாட்டிலும் இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழிலுடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்களாக வேண்டும்.
ஆனால், இவர்களிலே பலர் மாட்டிறைச்சி தின்பது முதலிய அனாசாரங்கள் வைத்துக்கொண்டிருப்பதால் ஹிந்து ஜாதி அவர்களைத் தாழ்வாகக் கருதுகின்றது. ஹிந்து நாகரிகத்திலே பசு மாடு மிகப் பிரதானமான வஸ்துக்களிலே யொன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொறுத்து நிற்கின்றது.
விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால், ஹிந்துக்கள் புராதன கால முதலாகவே கோ மாமிசத்தை வர்ஜனம் செய்து விட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பது கண்டு, ஜாதிப் பொதுமை அப் பகுதியைத் தாழ்வாகக் கருதுகிறது. இது முற்றிலும் நியாயம். ஆனால், பஞ்சம், நோய் முதலிய பொதுப் பகைவருக்கு முன்பு நமது உயர்வு - தாழ்வுகளை விரித்துக்கொண்டு நிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்திவிட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம்.
“ஹிருதய மறிந்திடச் செய்திடுங் கர்மங்கள்
இகழ்ந்து பிரிந்து போமோ?”
’முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும். நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததை யெல்லாம் நமக்கு இப்போது அன்னியர்கள் செய்கிறார்கள். நமது சிருங்ககிரி சங்கரா சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். சாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்தியேகமாக, விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை.
சுருக்கம்: நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்க ளென்று பாவித்தோம். இப்போது நம்மெல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள்.
நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினரென்று விலக்கினோம். இப்போது வேத