அப்பால் என் முகத்தை ஓரிரண்டு முறை நன்றாக உற்று நோக்கினார். (அவருடைய பெயர் ஸதீச சந்திர பாபு என்பதாக ஏற்கெனவே சொல்லி யிருக்கிறார்.)
"ஸதீச பாபு, ஏன் இப்படிப் பார்க்கிறீர்?” என்று கேட்டேன்,
“ஸ்வாமீஜி, க்ஷமித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஸந்யாஸி, எந்த தேசத்தில் பிறந்தவ ரென்பதைக்கூட நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. ஆயினும், உங்கள் முகத்தைப் பார்க்கும்பொழுது எனக்கு அந்த யுவதியின் உருவம் கலந்திருப்பது போலத் தோன்றுகிறது. உங்களிருவருடைய முகமும் ஒன்றுபோலிருப்பதாக நான் சொல்லவில்லை. உங்கள் முகத்தில் எப்படியோ அவளுடைய சாயல் ஏறியிருப்பது போலத் தோன்றுகிறது” என்றார்.
மதிராஸ் பக்கத்து யுவதி யென்று அவர் சொன்ன வுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப் புண்டாயிற்று. அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன் அந்தப் பதைபதைப்பு மிகுதி யுற்றது. (ஸந்யாஸி உடை தரித்திருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆசரித்து வந்திருக்கிறேன். வேஷத்தி லென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்தி லென்ன இருக்கிறது?)
“மீனாம்பாள்?... அட, போ! மீனாம்பா இறந்து போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே . . . . . ஐயோ, எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இறந்தாள்' ......... என்பதாக, ஒரு க்ஷணத்திலே மனப்பேய் ஆயிர விதமான கூத்தாடிற்று.
"ஸதீச பாபு, நானும் மதிராஸ் பக்கத்திலே ஜனித்தவன்தான். நீர் சொல்லும் யுவதியைப் பற்றிக் கேட்கும்போது எனக்குத் தெரிந்த மற்றொரு பந்துவைப் பற்றி ஞாபகம் வருகிறது. நீர் சொல்லிய பெண் யார்? அவள் பெயரென்ன? அவள் இப்போது எங்கே யிருக்கிறாள்? அவள் இங்கே என்ன நோக்கத்துடன் வந்திருந்தாள்? அவளுடைய தற்கால ஸ்திதியைக் குறித்து உமக்கு வருத்த முண்டாவதேன்? அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? எனக்கு எல்லாவற்றையும் விவரமாகத் தெரிவிக்க வேண்டும்" என்றேன்.
கதையை விரிக்கத் தொடங்கினார் ஸதீச சந்திர பாபு, ஒவ்வொரு வாக்கியமும் என்னுள்ளத்திலே செந் தீக்கனலும் இரும்புத் துண்டுகளை எறிவது போல விழுந்தது. அவர் சொல்லிய கதையினிடையே என்னுள்ளத்தில் நிகழ்ந்தனவற்றை யெல்லாம் இடையிட்டுக்கொண்டு போனால் படிப்பவர்களுக்கு விரஸமா யிருக்குமென் றஞ்சி இங்கு அவர் சொல்லிய விஷயங்களை மட்டிலும் குறிப்பிடுகிறேன். என் மனத் ததும்புதல்களைப் படிப்பவர்கள் தாமே ஊஹத்தாற் கண்டு கொள்ள வேண்டும்.
ஸதீச பாபு சொல்லலாயினர்: