"அந்த யுவதிக்குத் 'தாஞ்சோர்'', [தஞ்சாவூர்] அவள் பெயர் எனக்குத் தெரியாது. நாங்க ளெல்லோரும் அவளைத் தீன மாதா என்று பெயர் சொல்லி யழைப்போம். அவளுடைய உண்மைப் பெயர் அசுவினி பாபுவுக்கு மாத்திரந்தான் தெரியும். ஆனால், அந்தத் தேவியின் சரித்திரத்தை எங்களுக்கு அசுவினி பாபு அடிக்கடி சொல்லியிருக்கிறார், அதை உம்மிடம் சொல்லுகிறேன், கேளும்.
"அவள் ஒரு போலீஸ் பென்ஷன் உத்தியோகஸ்த ருடைய குமாரியாம். தனது அத்தை மகனாகிய ஒரு மந்தராஜ் நகரத்து வாலிபனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்கவேண்டு மென்ற தீர்மானம் செய்யப் பட்டிருந்ததாம். அவ் வாலிபன் “வந்தே மாதரம்” கூட்டத்திலே சேர்ந்து விட்டான்.
“அதிலிருந்து தகப்பன் அவளை வேறொரு போலீஸ் உத்தியோகஸ்தனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தான். கடைசித் தருணத்தில் அவள் கனவில் ஏதோ தெய்வத்தின் கட்டளை பெற்று, ஒரு பச்சிலையைத் தின்று விடவே அவளுக்குப் பயங்கரமான ஜ்வர நோய் கண்டு விவாகம் தடைப்பட்டுப்போய் விட்டது. அப்பால், தகப்பனாரும் இறந்து போய்விட்டார். இதனிடையே அவளுடைய காதலனாகிய மந்த்ராஜ் வாலிபன் என்ன காரணத்தாலோ அவள் இறந்துவிட்டதாக எண்ணி ஸந்யாஸம் வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டானாம்"......
"ஏழை மனமே, வெடித்துபோய் விடாதே. சற்றுப் பொறு என்று என்னால் கூடிய வரை அடக்கிப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை.
'ஐயோ, மீனா! மீனா!' என்று கூவினேன். *
பிறகு "ஸதீச பாபு, அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? சொல்லும். சொல்லும்" என்று நெரித்தேன்.
ஸதீச சந்திரருக்கு உளவு ஒருவாறு துலங்கி விட்டது. "இப்போது ஒன்றுமில்லை; செளக்கியமாகத்தா னிருக்கிறாள்” என்றார்,
"இல்லை யில்லை. என்னிடம் நீர் உண்மை பேச மயங்குகிறீர். நான் உண்மை தெரிந்தால் மிகத் துன்பப்படுவே னென்றெண்ணி நீர் மறைக்கிறீர். இதுவே என்னை நரகவேதனைக்குட்படுத்துகிறது. சொல்லி விடும். சொல்லி விடும்” என்று வற்புறுத்தினேன்.
மறுபடியும் ஸதீச பாபு ஏதோ பொருளற்ற வார்த்தைகளைப் போட்டுக் குழப்பி எனக்கு ஸமாதான வசனம் சொல்லத் தலைப்பட்டார்.
"பாரத தேவியின் ஹிருதயத்தின் மீதும், பகவத் கீதையின் மீதும் ஆணையிட்டி-ருக்கிறேன். என்னிடம் உண்மையை ஒளியாமல் சொல்லும்" என்றேன்.