ஹிந்துஸ்தானி பாஷையிலே கேட்டார்.
"பாபு, நான் ஸந்யாஸி யல்ல. நான் திருடன். நான் மஹா நிர்ப்பாக்கிய முடைய பாவி. மீனாம்பாள் தம்மிடம் கோவிந்தராஜன் என்ற பெயர் சொல்லியிருப்பா ளல்லவா? அந்தப் பாவி நான்தான்” என்றேன்.
உடனே என்னை அவர் மேன்மாடத்தி லுள்ள ஒரு அறைக்குத் தனியாக அழைத்துச் சென்றார். அங்கு என்னை நோக்கி, "நேற்றெல்லாம் நான் உம்மை அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தேன். நீர் இங்கு வரக்கூடு மென்ற சிந்தனை எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது" என்றார்.
பிறகு என்னிடம் “கிழக்கு முகமாகத் திரும்பி உட்காரும்” என்றார். அப்படியே உட்கார்ந்தேன். "கண்ணை மூடிக்கொள்ளும்" என்றார். இரண்டு கண் களையும் மூடிக்கொண்டேன். பிறகு எனது நெற்றியைக் கையால் தடவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்கு உறக்கம் வருவது போலிருந்தது.
'அடடா! இன்னும் மீனாம்பாளைப் பார்க்கவில்லை. எனது உயிரினு மினியாள் மரணாவஸ்தையி லிருக்கிறாள். அவளைப் பார்க்கு முன்பாக உறக்கம் வருகிறதே. இவர் என்னை ஏதோ மாய மந்திரத்துக் குட்படுத்துகிறார். எனது பிராண ரத்தத்தைப் பார்க்காதபடி கெடுத்து விட முயலுகிறார். இந்த மாயைக் குட்படலாகாது கண்விழித்து எழுந்து நின்றுவிட வேண்டும்' என்று சங்கற்பஞ் செய்துகொண்டு எழுந்து நிற்க முயன்றேன். 'ஹும்' என்றொரு சத்தம் கேட்டது. கண்ணை விழித்துப் விழித்துப் பார்த்தேன். திறக்க முடியவில்லை, மயக்கம் மேன்மேலும் அதிகப்பட்டது. அப்படியே உறங்கி விழுந்துவிட்டேன்.
விழித்தபிறகு நான் இரண்டு நாள் உறங்கிக் கிடந்ததாகத் தெரிந்தது. பக்கத்திலிருந்த ஒரு சேவகன் சொன்னான். "மீனா எங்கே? மீனா சவுக்கியமா யிருக்கிறாளா?” என்று அந்தச் சேவகனிடம் கேட்டேன்.
"எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று மறுமொழி கூறினன்.
சாதாரணமாக எப்போதும்போல இருந்தேனாயின், அந்தச் சேவகனை உதைத்துத் தள்ளி, இடையே வந்தவர்களை யெல்லாம் வீழ்த்திவிட்டு, ஓடியே மீனா ளிருக்குமிடம் போய்ப் பார்த்திருப்பேன். ஆனால் இந்த நேரம் என்னுடலில் மிகுந்த அயர்வும், உள்ளத்தில் மிகுந்த தெளிவும் அமைதியும் ஏற்பட்டிருந்தன. மனதிலிருந்த ஜ்வரம் நீங்கிப்போ யிருந்தது.
பாரிஸால் கிழவன் செய்த சூதென்று தெரிந்து கொண்டேன். அரை நாழிகைக் கெல்லாம் அசுவினி பாபு தாமே நானிருந்த அறைக்குள் வந்து என்னெதிரே ஒரு நாற்காலியின்மீது வீற்றிருந்தார். என்னை யறியாமல், எனதிரண்டு கைகளும் அவருக்கு அஞ்சலி புரிந்தன.