புறுத்தினேன்.
அதற்கவர், “அந்தச் செய்தி யெல்லாம் நானறிவேன். மஹா சக்தியின் கட்டளையை மீனாம்பாள் நன்கு தெரிந்து கொள்ளாமல் உனக்குக் கடித மெழுதிவிட்டாள். மீனாம்பாளுடைய ஜன்மம் மாறுபட வேண்டு மென்று அம்மை சொல்லியதன் பொருள் வேறு. அவள் பச்சிலை தின்னும்படி கட்டளையிட்டது, மீனாம்பாளுக்கு ஜ்வர முண்டாய்த் தந்தை யெண்ணிய விவாகம் தடைப்படும் பொருட்டாகவே யாம்.
"அதற்கு முன்பு அவளுடைய ஜன்மம் வேறு. அதற் கப்பால் அவளுடைய ஜன்மம் வேறு. மாதா தெளிவாகத்தான் சொல்லினள்; ஆனால் மீனாள் தனக்கு வேண்டாத ஒருவனுடன் விவாகம் நடக்கப் போகிற தென்ற தாபத்தால் படப்படப் புண்டாகி, உனக் கேதெல்லாமோ எழுதி விட்டாள். நீயும் அவசரப்பட்டு காஷாயந் தரித்துக்கொண்டு விட்டாய். உனக்கு ஸந்யாஸம் குருவினால் கொடுக்கப்படவில்லை. ஆயினும், இது வெல்லாம் உங்களிருவருடைய நலத்தின் பொருட்டாகவே ஏற்பட்டது.
உங்களிருவருக்கும், பரிபூரணமான ஹிருதய சுத்தி உண்டாவதற்கு இப் பிரிவு அவசியமா யிருந்தது. இப்பொழுது நான் போகிறேன். இன்று மாலை நான்கு மணிக்குப் பூஞ்சோலையிலுள்ள லதா மண்டபத்தில் மீனாம்பாள் இருப்பாள். உன் வரவிற்குக் காத்திருப்பாள்" என்று சொல்லிப் போய்விட்டார்.
மாலைப் பொழுதாயிற்று. நான் ஸந்யாஸி வேஷத்தை மாற்றி, எனது தகுதிக்குரிய ஆடை தரித்துக் கொண்டிருந்தேன். பூஞ்சோலையிலே லதா மண்டபத்தில் தனியாக நானும் எனது உயிர் ஸ்திரீ ரூபம் கொண்டு பக்கத்தில் வந்து வீற்றிருப்பது போலத் தோன்றியவளுமாக இருந்தோம். நான்கிதழ்கள் கூடின. இரண்டு ஜீவன்கள் மாதாவின் ஸேவைக்காக லயப்பட்டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது. வந்தே மாதரம்.
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
புதுச்சேரியினின்றும் 1910 ஆகஸ்டு மாதம் பிரசுரமான கதை நூல் ஆறிலொரு பங்கு என்பதாகும்.
சமூகத்தில் ஆறிலொரு பங்கு மக்களைத் தீண்டத் தகாத சாதியாக வைத்துள்ள கொடுமையை மற்றவர்கள் உணர்ந்து கொண்டு திருந்தவும், ஹரிஜன முன்னேற்றத்தில் தமக்குள்ள பாசத்தை வெளிப்படுத்தவும் பாரதி "ஆறில் ஒரு பங்கு" கதையைக் கருவியாகக் கொண்டார்.
சொல்லப்போனால், பிறவி மாத்திரத்திலேயே உயர்வு-தாழ்வு என்ற எண்ணம் கூடாது என்று பாரதி இந்தக் கற்பனைக் கதையிலும் அழுத்தமாக வற்புறுத்துகிறார்,
இந்தக் கதையிலும், இடைக்கிடையே தேசியத் தலைவர்களான லாலா லஜ்பத்ராய், அசுவினி குமார தத்தர் - ஆகியோரின் சிறப்பியல்புகளையும் பாரதி தெளிவுறுத்தி யுள்ளார்.
------------
முற்றிற்று