Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 01 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)
பானு விழுந்து விழுந்து சிரிக்கிறாள். திடுக்கிட்டு எழுந்தேன். இனமறியாத பயம் சூழ்ந்து கொண்டது. பானு அழுகிறாளோ என்னவோ! இந்த நள்ளிரவில்! தன்னந்தனியாக! நீண்ட நேரம் அந்த இருட்டில் எழுந்து உட்கார்ந்திருந்தேன். ஒரு முறை சென்று வருவோமா என்று தோன்றியது. ஆனால் நான் அந்த நள்ளிரவில் போனால் அவர் என்னமாவது நினைத்துக்கொள்ளலாம். ஏதாவது சொல்லவும் செய்யலாம். சிந்தித்துக்கொண்டே ஒரு விதமாகச் சிறிதுநேரம் தூங்கிவிட்டேன். யாரோ அவசர அவசரமாக எழுப்புகிறார்கள். துள்ளி எழுந்தேன். அவர் தான் பானுவின் கணவர் ராஜசேகரம்! அவர் முழுவதும் வெலவெலத்துப் போயிருந்தார். "பானு... இல்லே. இந்தக் கடிதங்க..." என்றார் ஏதோ தேடிக்கொண்டே. நான் அதிர்ச்சி யடைந்தேன். உடலெல்லாம் மரத்து விட்டது. ஏதோ கெட்ட கனவு காண்பது போல் தோன்றியது. அடைத்துக்கொண்ட தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டேன். அவசரமாகக் கேட்டேன் -- "பானு வீட்லே இல்லியா? என்ன ஆனாள்?"
அவர் குற்றவாளிபோல் தலை குனிந்து கொண்டார். நடுங்கிக்கொண்டிருந்தார். "என்னவோ! எனக்குத் தெரியாது. பாபு அழுதுகிட்டிருந்ததால் முழிப்பு வந்தது. அவங்கம்மா வருவாளாகட்டும்னு கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். அவன் சமயலறை முன்னே போய் அழுதுகிட்டிருந்ததால் எழுந்து போனேன். எவ்வளவு கூப்ட்டாலும் பதிலில்லே. எனக்கு ஏதோ சந்தேகம் வந்து வேகமா அறெக்கு வந்து பாத்தேன். மேஜெமேலே கடிதங்க இருந்தது. என் பேருக்கு எழுதினது மேலே இருந்தது. எடித்துப் பாத்தா 'உங்கள் வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாகத் தப்பிச் செல்கிறேன்'னு ஏதோ எழுதி இருந்தா. நான் முழுசும் படிக்கல்லே. பாபுவெ அடுத்த வீட்டுக்காரங்க கிட்டே ஒப்படெச்சிட்டு இப்படி வந்தேன்... நீங்க..." நிறுத்திவிட்டார்.
எல்லாம் புரிந்துவிட்டது. இரவு ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது. பானு எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்டு, பெற்ற பாசத்தையும் கூடக் கொன்றுவிடத் துணிந்துவிட்டாள். வலுக்கட்டாயமாக உயிரை மாய்த்துக்கொள்ளப் போய்விட்டாள். "பானூ!" என்று பைத்தியம் பிடித்தவன்போல் கத்தினேன். துக்கம் தொண்டையை அடைத்தது. தாங்கமுடியாமல் சுவரில் தலையை மோதிக்கொண்டேன். "அய்யோ! பானூ ...!"
சட்டென்று செய்ய வேண்டியது நினைவு வந்தது. ஸ்டாண்டிலிருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டேன். பானு எழுதிய கடிதங்களைப் படிக்க நேரமில்லை. சட்டைப் பையில் போட்டுவிட்டேன். அடுத்த அறைக்குச் சென்று நண்பர்கள் இருவரை எழுப்பி, சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். சில வினாடிகளில் கடற்கரைப் பக்கமும், இரயில் பாதையை நோக்கியும் சைக்கிள்களில் புறப்பட்டுச் சென்றோம். இரவு மூன்று மணி. கண்ணைக்