குத்திக்கொண்டாலும் தெரியாது. இருள் மையைப்போல் சூழ்ந்திருந்தது. கடற்கரை முழுவதும் சல்லடை போட்டுத் தேடினேன். ஈரமணலில் இறங்கி விடும் கால்களை இழுத்துக்கொண்டு ஓட முடியாமல் ஓடிக்கொண்டு, தண்ணீர்க் கரையை நோக்கி டார்ச் விளக்கைப் போட்டு, சிதறி விழும் அலைகளுக்குள் பார்வை செலுத்தி "பானூ! பானூ! தங்கச்சி!... பானூ!" என்று சக்தி உள்ளவரையில் உரக்கக் கத்தி மூன்று மணி நேரம் திரிந்துகொண்டே இருந்து விட்டேன். பொழுது புலர்ந்தது. ஆசை ஒளி அணைந்து விட்டது. பானு மாயமாகி விட்டாள். முடிவில்லாத கடலின் மடியில், என்றும் புதுமையான வெள்ளத்தில் கலந்துவிட்டாள். நிரந்தரமாகவே போய்விட்டாள். "தங்கச்சி!" இடிந்து விட்டேன். ஓ வென்று அழுதேன். "பானு போயிட்டா. இனி இல்லே. இல்லே." ....
அடுத்த வினாடியே அந்தத் துக்கம் - இதயத்தைப் பிழியும் அந்த வேதனை - தாங்கமுடியாத அந்த நடுக்கம் - எல்லாம் ... எல்லாம் மாறிவிட்டன. அவர் மேல் கோபம்! வெறுப்பு! அருவருப்பு! பழிவாங்கும் உணர்ச்சி! கைப்பிடிகள் இறுகி அழுத்திக்கொண்டன. பற்கள் நற நற என்றன. மூச்சு அனல்வீசியது. புறப்பட்டேன்.
அவர்கள் மூவரும் எதிர்ப்பட்டனர். இரயில் பாதையெல்லாம் தேடிவிட்டு வந்திருந்தனர். அவர் என்னைப் பார்த்ததும் சொன்னார் - "ராத்ரி ரயில்வே லைனில் விபத்து ஒண்ணும் நடக்கலியாம். ஸ்டேஷன்லே நான் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்." கொஞ்சம் தலை குனிந்து கொண்டார்.
"பெரிய காரியம் செஞ்சே. எந்த விபத்து நடந்தாலும் உன்கிட்டேதான் நடக்கணும். உண்மையெச் சொல். இரவு என்ன குழப்பம் நடந்தது?"
அவர் வெளிறிப்போனார். வெறுப்போடு, மரியாதை குறைவாகப் பேசுகிறேன் என்பதனால் போலும். மறுபடியும் கேட்காமலேயே சொன்னார் --
"ராத்ரி ஒண்ணும் நடக்கல்லியே!"
"ஒண்ணும் நடக்கல்லே! ஒண்ணும்?"
"ஒண்ணும் இல்லீங்க!"
"அப்படியா? ஒண்ணும் நடக்காமலே, சும்மா புண்ணியத்துக்கு, உயிரெவிட அதிகமா நேசிக்கும் பச்செக் குழந்தையெ - பெத்த மகனெ - விட்டுட்டுப் போயிட்டாளா? திருட்டு ராஸ்கேல்! உன் கொடுமெக் கெல்லாம் முடிவு வந்துட்டுது. என் தங்கையெ உன் இஷ்டப்படியெல்லாம் அழவெச்சி அழவெச்சி கடைசியிலே உயிரையே வாங்கிட்டே! மனுஷனெ ஈவிரக்க மில்லாமே கொலெபண்ணும் உன்னெ ... உன்னே..." பட பட வென்று கன்னங்களில் வைத்து வாங்கினேன். உதைத்தேன். குத்தினேன். கொலைபண்ணும் அளவுக்குச் செய்துவிட்டேன்.