வேணாம்னு சொன்னதுக்குக் கோவிச்சிக்கிட்டு அடம்புடிச்சிக் காலையிலே இருந்து சாப்பிடாமெ வயத்தெக் காயவெச்சிக்கிட்டு உக்காந்திருக்கா. இங்கே பார் கேசவ்..." என்று சித்தி ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள், வியப்போடு "அப்படீன்னா பானு காலேஜ்லே சேரமாட்டாளா!" என்று கேட்டேன்.
"நல்லா இருக்குதுடா நீ சொல்றது! எறும்பு புத்து போலெ பெரிய குடும்பம். வீடு நிறெய பொம்பளப் பசங்க. கல்யாணம் காட்சி, பிரசவம், புண்ய தினங்க- பொறக்கறவங்க பொறந்துகிட்டே இருந்தா, வயசுக்கு வர்றவங்க வயசுக்கு வந்துக்கிட்டிருந்தா, வீடெல்லாம் ஒரே செலவு மயம் ஆயிட்டிருந்தா எவ்வளவுண்ணு தாங்க முடியும்? நூறு ஆயிரம் வந்து விழுதா? இருக்கற ஊர்லே பள்ளிக்கூடம் இருக்குது. அதனாலே இதுவரெக்கும் படிச்சா. நல்லா இருக்குது. பொம்பளப் பொண்ணே வேற ஊருக்கு அனுப்பி படிக்க வெக்கற்தின்னா நமக்கு வசதி இருக்குதா? அவளுக்கு மட்டும் இதெல்லாம் தெரியாதுன்னா சொல்றதுக்கு?" சித்தி சிறிது நேரம் சும்மா இருந்தாள். நான் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன்.
"அவளுக்கு சரஸ்வதி கடாட்சம் இருக்குது. உண்மெ தான்; படிக்கவெச்சா முன்னுக்கு வருவா. ஆனா நமக்கு அருகதெ எங்கேடா இருக்குது? அவளோடெ ஆசெங்கெல்லாம் நிறெவேறணும்னு எழுதி இருந்தா என் வயத்தலே ஏன் வந்து பொறக்கறா?" சித்தியின் தொண்டை அடைத்துவிட்டது. முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்ளும்பொழுது என் மனதில் துயரம் சூழ்ந்தது. ஏழ்மை என்றால் என்ன என்பது முதன்முறையாக எனக்கு விளங்கலாயிற்று.
உண்மைதான் - சித்தப்பாவிற்குச் சொத்து குறைவு. குழந்தைகள் அதிகம். வரவு குறைவு! செலவுகள் அதிகம்! ஒரு மகளைக் கல்லூரியில் படிக்கவைப்பது சித்தப்பாவால் இயலக்கூடிய காரியமல்ல. சித்திக்கு மகள் மீது எல்லை இல்லாத அன்பு இருக்கிறது, மகளுடைய அறிவாற்றல்களில் முழுமையான நம்பிக்கை இருந்தும் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஆனால் பானுவின் விருப்பத்தை இவ்வளவு எளிதாகத் தள்ளிவிட்டால் பானு என்ன ஆவாள்? எப்படித் தாங்கிக்கொள்வாள்?
பானு...பானுமதி... என் பெரிய பாட்டியின் பேத்தி. முந்திய ஆண்டுவரையில் நாங்கள் உறவினர்கள் என்ற அளவில் தெரியுமே தவிர வேறொன்று மில்லை. நான் முதன்முறை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த பொழுது, அத்தையின் ஊரில் படிப்பை நிறுத்திவிட்டேன். அப்பா இங்கே உயர்நிலைப் பள்ளியில் சேர்த்து என்னைச் சித்தப்பாவின் வீட்டில் தங்கவைத்தார். பானு ஐந்தாம் பாரம் தேர்வு பெற்றுப் பள்ளி இறுதி வகுப்புக்கு வந்தாள். இருவரும் ஒரே வகுப்பில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டில் எல்லாரையும் விட பானு எனக்கு மிகவும் நெருக்கமானாள். நான் வந்த