Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 05 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)
பல்கலைக் கழகத்தில் ஃபீஸ் கட்டிவிட்டு, மாணவர் விடுதியில் சேர்ந்து சாமான்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி விட்டுச் சிறிது நேரம் படுத்துக்கொண்டேன். மாலை எழுந்து அம்மா எனக்காகச் செய்து கொடுத்த பருப்புருண்டை டப்பாவை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு புறப்பட்டேன். அப்பொழுது பானுவைப் பார்த்துச் சில மாதங்கள் ஆகியிருந்தன. பானு மிகவும் இளைத்திருப்பதாகத் தென்பட்டது. என்னைப் பார்த்ததும் சிரித்த முகத்துடன் ஏதோ புதையல் கிடைத்தாற் போல கையைப் பிடித்துக்கொண்டாள்.
"நல்லா இருக்கறியா? நேத்தே வருவேன்னு நினெச்சேன். முதல்லெ உன் லெட்டரே எனக்கு நாள் கழிச்சி தான் கிடெச்சது. பெரியம்மா எல்லாரும் நல்லா இருக்காங்களா? அப்பாடா! ரொம்ப உயரமா வளந்துட்டியே!" என்று கேள்வி மழை பெய்துவிட்டாள். பதில்களைக் கேட்காமலேயே "டேய் நானீ! மாமா வந்திருக்காருடா! மாமா! உனக்கென்ன கொண்டு வந்தாரோ கேளு" என்று நடைவண்டியுடன் ஆடிக்கொண்டிருந்தவனை அழைத்துக்கொண்டு வந்தாள்.
அவன் துள்ளித் துள்ளி நடந்து அருகில் வரும்பொழுது கன்னத்தைக் கிள்ளி "உனக்கொண்ணும் தெரியாதுடா மருமகனே!" என்றேன்.
"மருமகன்னா என்ன அவ்வளவு லேசா நினெச்சிட்டிருக்கிறியா என்னா? ஒரு பிஸ்கட் துண்டுகூட இல்லேன்னா அதெ ஞாபகம் வெச்சுக்குவான் தெரிஞ்சுக்கோ!" என்றாள் பானு சிரித்துக்கொண்டு.
"அப்படின்னா உன் பையனுக்குப் பிஸ்கட் தட்சணை போதும்னு சொல்றியா?" என்றேன் டப்பாவைக் கொடுத்துக்கொண்டே.
"இப்போதைக்குப் போதும்!" என்றாள் மதிப்புடன். ஆண் பையனுடைய தாயல்லவா! நானி பிஸ்கட்டுகள் எண்ணிக் கொண்டிருக்க நாங்கள் இருவரும் பேச்சில் மூழ்கிவிட்டோம். எல்லாவற்றிற்கும் இடையில் என் திருமண விஷயம்கூட எடுத்தாள் பானு. நான் திருமணம் செய்யப்போகும் பெண் யாராக இருந்தாலும் அவள் அதிர்ஷ்டக்காரியாம். அந்த அதிர்ஷ்டம் சுசீலாவுக்குக் கிடைக்கும்படியாகச் செய்ய வேண்டுமாம். சுசீலா என் தாய் மாமனின் மகள். பானுவுக்கு உயிர்த்தோழி. சுசீலா பிறந்ததிலிருந்தே கேசவின் மனைவியாகவே வழங்கப்படுகிறாள். ஆனால் அது உண்மையோ இல்லையோ என் தந்தைக்கும், கடவுளிருந்தால் அவருக்கும்தான் தெரிய வேண்டும். தந்தை எப்பொழுதும் வெளியே விடமாட்டார். கடவுள் தென்படக்கூடத் தென்படமாட்டார்.அப்படியானால் தெளிவாவதுதான் எப்படி? என் கருத்தைச் சொல்லச் சொன்னால் மட்டும் எனக்கு ஒன்றும் தடையில்லை. மேலும் சந்தோஷம் கூட - ஆனான் நான் என் திருமணம் குறித்து என்றும் சிந்தித்தது