Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 06 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)
சனிக்கிழமை மாலை நான் போகும்போது மாமா வீட்டிலேயே இருந்தார். இருவரும் ஏதோ மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தனர். என்றும் இல்லாததைப் பார்த்துக்கொண்டே நின்னுவிட்டேன்.
"என்னங்க ராவ் சார்! அதிசயம் பாக்கறாப் போல அப்படியே நின்னுட்டீங்க?"
"ஆம், அதான், அதான்.... உங்களைத்தான்!" சிரித்தேன். அன்று ஏனோ அவர் ஓய்வாக உட்கார்ந்திருந்தார். கல கல வென்று பேசிக்கொண் டிருந்தார். "நீங்க எல்லாப் படிப்பும் படிக்கிறீங்களே தவர கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க ஏங்க? என் தங்கெ யாரோ ஆவட்டும் சுகப்பட்டுப் போவா. உங்க கல்யாணத்துக்கு வந்து ஒரு பத்து நாள் தமாஷா காலம் தள்ளலாம்னு பாத்தா, நீங்க என்னடான்னா..."
"அதுக்கென்ன அவசரம்! ஒரு நூறு ரூபா நமதில்லேன்னு நினெச்சா சலிப்பு வர்றவரெக்கும் ஓட்டல்காரன் விருந்து போட்றான். அவ்வளவுதானே அண்ணா" என்றாள் பானு.
"அண்ணா இல்லே, அக்கான்னு கூப்பிடு - உங்க அண்ணனெக்கூட ஒரு ஆம்பளென்னு நினைச்சிட்டிருக்கிறியா என்ன?"
"நீங்க உங்க இனத்துக்கு நல்ல உதாரணமாத்தான் இருக்கிறீங்க!"
"சாமர்த்திய மெல்லாம் உங்க அண்ணன் தங்கெ ரெண்டுபேருக்கு மட்டும் சொந்தம் இல்லெ; உன் அண்ணனுக்கு இருக்கற பணம் மட்டும் என்கிட்டே இருந்தா, பாத்துக்கோ மாடியிலே கால், காரிலேயே..."
"காரிலே கால் கிளப்பிலேயே!"
"இல்லேன்னா உன் அண்ணனாட்டம் பொம்பளெ மாதிரி பேசிட்டே உக்காந்திருப்பேனா என்ன!" விவாதங்களிலே ஒரு மணிநேரம் கடந்தது. "நாளெக்கு எங்கேயாவது பிக்னிக் போலாமா?" என்றார்.