மனுஷனெ அவ்வளவு சீக்கிரமா ஒதுக்கிவிடக் கூடாது. உன் நல்லது கெட்டது, உன் கஷ்ட சுகங்களெப் பாக்கவேண்டியது மாமாதான்."
பானு வேதனையுடன் சிரித்தாள். "என் நல்லது கெட்டது கஷ்ட சுகங்க! அந்தக் குடும்ப தர்மம் இந்தக் குடும்பத்தலெ மட்டும் இல்லெ அண்ணா!"
நான் ஒன்றும் பேசவில்லை.
"நான் எதெச் சொன்னாலும் வேடிக்கையா இருக்குமோ என்னவோ!" என்றாள் சிறிது நேரத்தில்.
சொல்லச் சொல்லி கேட்பதுபோல் பார்த்தேன். என்ன கேட்கப் போகிறோமோ என்ற பயம் ஒரு பக்கம்.
"பாபு வயத்தலெ இருக்கும்போது ஒரு தடவெ காய்ச்சல் வந்தது. ராத்ரி அவர் வரும்போது படுத்திட்டிருந்தேன். 'என்ன படுத்திட்டியே'ன்னு கேட்டதற்குக் 'காய்ச்சல் வந்தாப்பொல இருக்குது. தலெ வலியினாலே படுத்திட்டே'ன்னு சொன்னேன்.
'இன்னக்கி ராத்ரி சாப்பட்றதெ நிறுத்திடு! நாளெக்கி காலெயிலே அதுவே போயிடுது'ன்னார். குறெஞ்சது உடம்பு மேலே கை வெச்சிகூட பாக்கல. குளிர் எடுத்ததனாலெ போர்வெயெப் போத்திக்கிட்டேன்.
எப்பவோ முழிப்பு வந்தப்பொ விளக்கு வெளிச்சமா எரிஞ்சிக்கிட் டிருந்தது. படுக்கெயிலே அவர் இல்லே. தெருக் கதவு சும்மா சாத்தி இருந்தது. அது வழக்கம் தான்னாலும் பயத்தலெ இதயம் படபடத்தது. அவசரமா எழுந்துபோய் தாப்பாள் போட்டுட்டு நடுங்கிக்கிட்டெ வந்து விழுந்தேன். வேர்வெயா வந்தது. அளவுக்கு மீறி தாகம் எடுத்தது. அப்பொ வெந்நீர் காய்ச்சிக்கற்துக் கில்லாமெ பச்சத் தண்ணி குடிச்சிட்டுப் படுத்தேன். எவ்வளவு நேரமானாலும் தூக்கம் பிடிக்கலெ. பன்னண்டு ஆவப்போவுது. அப்பொ வந்தாக்கா கதவு தெறந்தேன். 'சீக்கிரமா வந்துடலாம்னு போனா நேரமாயிட்டுது பானு! காய்ச்சல் எப்படி இருக்குது?'ன்னு கேட்டுட்டு கட்டில் மேலே உக்காந்தார்.
'ஒண்ணும் கவலெப்படாதே நாளெக்கி காத்தாலெ குறெஞ்சிபோயிடும்.' குறெயிலேன்னாலும் யாருக்கு இங்கெ கவலெ? எப்படித் தைரியம் சொல்லச் சொல்லி யார் கேட்டாங்க? காலெயிலே காய்ச்சல் அதிகமா யிட்டுது. அது அவருக்குத் தெரியாது.
'சமயல் பண்ண முடியாதா?'
'செய்ய முடியாது.'
'போவட்டும்! நான் ஓட்டல்லெ சாப்பட்றேன். உனக்கு ஏதாவது வேணுமா?'
'தேவெயில்லே.'
'சரி!'