காய்ச்சல் குறெயில்லேன்னா டாக்டரெ அழெச்சிட்டு வரணும்னு, காய்ச்சல்லெ அவஸ்தப் பட்றவங்களுக்காவது ரொட்டி, காபி ஏதாவது ஒண்ணு வாங்கி வந்து தரணுங்கற்து தெரியாதா? என் கண்ணு நிறெஞ்சி போச்சி. வாயும் வயிறுமா இருக்கறவங்க பட்டினி கிடக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. வயித்திலெ இருக்கற குழந்தெக்காக வாவது ஏதாவது சாப்படணும். என்ன சாப்பட்றது? யார் கொண்டு வருவாங்க? பத்து மணி வரெக்கும் அப்படியே படுத்திட்டிருந்தேன். தெருவுலெ சோடா விக்கறவன் சத்தம் கேட்டது. எழுந்து போய் சோடா விக்கற பையனெக் கூப்ட்டேன். உள்ளே வந்து காசுக்காக மேசெ டிராயருங்க, அலமாரித் தட்டுங்க, பாண்ட் ஜேபிங்க, பெட்டி மூலெங்க எல்லாம் குடெஞ்சி பாத்தேன். எங்கெயும் ஒரு செல்லாத காசு கூட கிடைக்கிலெ. நெறஞ்ச கர்ப்பத்தோட கொதிக்கற காய்ச்சல்லெ, சாப்பட்றதுக்கு ஒண்ணு மில்லாமெ சோடாத் தண்ணி குடிக்கலாம்னு ஆசெ வந்தா அரை யணா...ஒரே ஒரு அரையணா என்கிட்டெ இல்லாமெ போயிட்டுது பாத்தியா! என் புருஷன் சம்பாதனெயெ நான் எவ்வளவு சந்தோஷமா அனுபவிக்கறேனோ! வீட்லெ மனெவி என்ற முறெயிலெ எவ்வளவு சுதந்தரம் சம்பாதிச்சிக்கிட்டேன்! கண்ணெத் தொடச்சிக்கிட்டு தெருவுக்கு வந்து 'போப்பா தம்பி! காசு கிடைக்கிலே'ன்னு சொன்னேன்.
'பரவால்லேம்மா, நாளெக்கிக் கொடுங்க'ன்னான் அவன்.
'வேணாம் போப்பா'ன்னு சொல்லிட்டு உள்ளே வந்தேன். அழுகையெ* நிறுத்தற்துக்கு ஒரு முயற்சியும் பண்ணல்லெ. ஆத்தரம் தீர்ற வரெக்கும் அழுதேன். அஞ்சி நிமிஷமானாலும் தெருவிலெயே கத்திக்கிட்டிருந்தான் அவன். எழுந்துபோய் மறுபடியும் கூப்ட்டேன். 'பார் தம்பி! நாளெக்கிகூட என்கிட்டே காசு இருக்காது. ஜொரமா இருக்குது. நேத்துலே இருந்து ஒண்ணும் சாப்படல்லெ. தாகமா இருக்குது. ஒரு சோடா...சும்மா தர்றியா?'
அவன் பயந்துபோய் நின்னுட்டான்.
'நிஜம்தான் தம்பி! எனக்கு சோடா குடிக்கணும்னு இருக்குது. என்கிட்டே காசு இருக்கும்போது கண்டிப்பா குடுத்துட்றேன். ஒரு சோடா குடுக்கமாட்டே?'
அவன் பயம் தெளிஞ்சி 'குடுக்கிறேங்க'ன்னு சொல்லி வண்டியெப் பாத்து ஓட்டம் புடிச்சான். அன்னக்கி அந்தச் சோடாக்கு இருந்த மதிப்பு எந்த அம்ருதத்துக்கும் இல்லெ. அந்தத் தம்பி காட்டன கருணெ வாழ்க்கையிலெ இனிமே நான் பாக்கப் போறதில்லை. காலி பாட்டிலெ அவன்கிட்டெ குடுத்துட்டு, 'எனக்குப் பொறக்கற கொழந்த உன்னப்போல நல்லவனா இருக்கணும்'னு சொன்னேன். அவன் சிரிச்சிட்டுப் போயிட்டான். திக்கில்லாதவங்களுக்கு தெய்வமே தொணென்னு சொல்றாங்க. அன்போடு குடுத்த அந்தச் சோடா மருந்து மாதிரி வேலெ செஞ்சதுன்னு நெனக்கறேன். சாயந்திரத்துக் குள்ளெ காய்ச்சல் குறெஞ்சது. சமயல் பண்ணேன்." பானு நிறுத்தினாள். நான் பானுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
தொடரும்