(Reading time: 11 - 21 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 12 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)

"மாமா உனக்கு எப்பவும் காசு குடுக்க மாட்டாரா?"

"அதெ வேறெ கேக்கணுமா?"

"போவட்டும், நீ எப்பவாவது கேட்டுப் பாத்தியா?"

"லட்சம் தடவெ, எனக்கு ஏதாவது தேவெ இருக்கும்னு, அதுக்கும் இதுக்கும் கேக்கற்துக்கு முடியாம போவுதுன்னு, சமயம் கிடைக்கிறப்பொ காலு அரை குடுக்கச் சொல்லி எத்தனையோ விதமா புரியறா மாதிரி சொன்னேன். வெக்கத்தெ விட்டு தேவெப்பட்றப் போதெல்லாம் கேட்டுட்டு வந்தேன். எனக்கு ஒரணா குடுத்தா அதெ எதுக்குச் செலவு பண்ணேனோ சொல்லணும். அப்படிச் சொல்றது எனக்கு இஷ்டமில்லெ. கேக்கற்தெ நிறுத்திட்டேன். நம்ம ஊரு போவும்போது அஞ்சொ பத்தோ அம்மா குடுப்பாங்க. அதெயே வெச்சிட்டு சாக்கரதெயா செலவு பண்ணிட்டு வருவேன். பணத்தெ எவ்வளவு சாக்கரதெயா செலவு பண்ணாலும் குறெஞ் சிட்டு வருமே தவர வளர்றதில்லே இல்லே? அவர் சம்பாதனெ விஷயத்தலெ, இந்தக் குடும்பச் செலவுகள்ளெ ஒரு காலணாவுக்குக் கூட நான் தலையிடக் கூடாது. சுதந்தரமா ஒரு பொருள் வாங்கக் கூடாது. ஒரு தடவெ பான்சி சாமானுங்க தெருவிலே வித்துக்கிட்டு வந்தது. அக்கம் பக்கத்தவங் கெல்லாம் கூட்டம் கூடி சாமானுங்களெப் பாத்துகிட்டிருந்தாங்க. நான் தெரு வாசப்படியிலெ நின்னுட்டிருந்தேன். யார் யாருக்கு என்னென்ன புடிச்சிதோ அதெ வாங்கிகிட்டிருந்தாங்க. பக்கத்து வீட்டு பாமா பாட்டி என்னெக் கூட கட்டாயப்படுத் தனாங்க. ஊதுவத்தி கொளுத்தி வெக்கற பீங்கான் செடி ஒன்னு வாங்கிகிட்டேன். அது ரொம்ப அழகா நல்லா இருந்தது. தடியா அடிப்பாகம், மேலெ படர்ந்த கிளைகள்ளெ பூப் பூத்தாப்பொல இருந்தது. அதுகள்ளே ஊதுவத்திங்க குத்தி வெக்கறாங்க. பாமா பாட்டி ஒரு ரூபா கடன் குடுத்தாங்க. அதெ நல்லாக் காட்டிட்டுப் பணம் கேட்டாக்கா 'யாரு வாங்கச் சொன்னது?'ன்னு கேள்வி கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது. யாரு வாங்கச் சொல்லணும்? வீட்டுக்காக எனக்குப் புடிச்ச பொருளெ நான் ஏன் வாங்கக்கூடாது? இவ்வளவு சின்ன விஷயத்துக்கு வீட்டுக்காரியான எனக்கு உரிமெயில்லே? அவரெக் கேக்காமெ என் இஷ்டப்படி செய்தேங்கற்தனாலே அந்த ரூபா குடுக்கவேண்டிய கடமெ தனக்கு இல்லே. அதுதான் முடிவு. என்ன பண்ணுவேன்? அந்தக் கடனெ எப்படிக் குடுப்பேன்? பாமா பாட்டி வாங்கிக்குவாளோன்னு கேட்டா, அவங்க மருமககிட்டே வெள்ளியிலே இருக்குதாம். வேணாம்னு சொல்லிட்டாங்க. வேற யாருக்காவது வேணுமான்னு சொல்லிக் காட்னா யாரு வாங்கிக்கறாங்க? தாங்க முடியாத அளவு துக்கம் வந்தது. ஏதோ திடீர்னு யோசனெ வர எழுந்துபோய் அரிசி குடுத்து கடனெத் தீத்துக்கிட்டேன்.

பிறகு 'அந்த ரூபா குடுத்திட்டியா?'ன்னு கேட்டார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.