எனக்குப் பைத்தியம்தான், இல்லேன்னா பொம்பளெக்கி இருக்க வேண்டிய நாணம், பணிவு, அடக்கம், எழவு மருந்துக்காவது உன்கிட்டே......."
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பானு சொல்வது தவிர அவர் திட்டுவதை நான் நேரிலே அதுவரை கேட்ட தில்லை. என்ன நடந்தது? பானு ஏதாவது தப்பு செய்துவிட்டாளா? அவர் துணிகளை உடுத்திக்கொண்டு வீறாப்பாகப் போய்விட்டார். நான் நானியைத் தோளில் போட்டுக்கொண்டு உட்பக்கம் நோக்கி நடந்தேன். மணையின் முன்னால் தட்டில் வைத்த சாதம் பிசைந்து விட்டுவிட்டது போலிருந்தது. பானு எதிரில் தலை குனிந்துகொண்டு உட்கார்ந்திருந்தாள்.
" என்ன நடந்தது பானூ...!" என்றேன்.
பானு தலை எடுத்துப் பார்த்தாள். தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து விழுந்தது. என்னமோ சொல்லவேண்டும் என்று நினைத்துச் சொல்ல முடியாமல் இருந்தாள்.
"ஆமாம், என்ன நடந்தது? கறி சரியாப் பண்ணலியா?"
"கொஞ்சம் உப்பு அதிகமாப் போயிடுத்து. கவனிச்சிதான் பொறுக்கனேன். இருந்தும் சாதத்தலெ கல்லு இருந்தது." என்றாள் மெதுவாக.
எனக்கு வியப்பாக இருந்தது. "ஆனாலும், அதிக்கே அவ்வளவு திட்டு திட்டணுமா? கல்லெ எடுத்துப் போட்டுட்டு ஆவக்கா ஏதாவது போட்டு சாப்ட்டா போவுது! எவ்வளவு கவனமா பண்ணாகூட குறெயே இல்லாம இருக்குமா? ஒவ்வொரு விஷயத்துக்கும் மனசெக்குத்தறா மாதிரி பேசினா.."
சற்று நேரம் கழித்து பானு கூறினாள்----
"புதுசுலெ என் சமயல் மேலெ அவருக்குக் கெட்ட அபிப்ராயம் விழுந்துட்டுது. உண்மெயாவே அப்பொ எனக்கு ஒரு வேலையும் வராது. பசியெக் கூட தீத்துக்க முடியாத அளவு பயங்கரமா இருக்கும் சமயல்! நாலஞ்சி மாசத்தலெ எல்லாம் கத்துக்கிட்டேன்.----இப்பொ எது வானாலும் செய்ய முடியுது. ஆனா அவர் அபிப்பிராயம் மட்டும் மாறல்லெ. நான் என்னமோ கையாலாகாதவள்னும், தனக்குச் சுகமில்லாமெ போயிட்டுதுன்னும் அவர் நினெச்சிக் கிட்டிருக்காரு! இப்பொ என்னெக்காவது என் வேலெயிலே கொஞ்சம் பிசகு வந்ததுன்னா அந்தப் பழைய அபிப்ராயமே வெளியே வருது. இஷ்டம் வந்தபடி திட்றாரு. நான்என்ன பண்றது சொல்லு?"
என்தலை! நான்சொல்வது! ஒன்றும் பேசவில்லை.
"இன்னக்கி சண்டெக்கிக் காரணம் உப்பு அதிகமானது ஒண்ணு மட்டுமில்லே - அது சும்மா மேலுக்குக் காட்றது. ஆனா, நீ எனக்குப் புஸ்தகங்ங கொண்டு வந்து குடுக்கிறேன்னு, நான்