"அப்பா! உன்கிட்டெ பேசிக்கிட்டெ உக்காந்திருக்ணும்னா ரொம்ப பொறுமெ வேணும். நான் ஒண்ணு சொல்றேன் கேளு----நீ உலகத்தெத் திருத்தி வெக்க முடியாது. உன் குடும்பத்தெயே நீ திருத்திக்க முடியலெ. தாமரெ எலெ மேலெ மின்னிக்கிட் டிருக்கும் தண்ணீர்த் துளி நமக்கொரு பாடம் கத்துக் குடுக்குது. எதலேயும் நாம ரொம்ப ஒட்டிக்கக் கூடாது. அப்படி யோசிச்சிக் கிட்டே உக்காந்திருந்தா தலெவலிதான் மிச்சம். எல்லாம் பிரச்சனைகளே! எல்லாம் கேள்விகளே! அதனாலே நாம செய்யக் கூடியது ஒண்ணு மில்லே. நடுவுலெ நம்ம மண்டெயெ ஏன் ஒடச்சிக்கணும்? உலகம் எப்படிப் போவுதோ, போவட்டும்! அதன் கூடவே நீயும் போ---- நானும் போறேன். அவ்வளவே தவர நம்ப பின்னாலே உலகம் வராது."
பானு சிரித்தாள். "எப்பத்தலே இருந்துங்க நீங்க இவ்வளவு பெரிய வேதாந்தி ஆனீங்க?"
"ஆம்...... இப்பப்பதாங்க! நீங்க எங்களுக்குச் சிஷ்யையா வர்றீங்களா?" என்றேன் நானும் சிரித்துக் கொண்டே.
"கண்டிப்பா! அதுக் கில்லாமலா! இந்த யோசனெங்க எதுவும் வராதபடி இந்த மூளையெ மாத்தி வெச்சிடுங்க."
"சிவோஹம்! எங்கே, ஒரு டஜன் வாழப்பழம்... ஆரத்தி கற்பூரம்...தேங்காய்..."
பிறகு நான்கைந்து வாரங்கள் வரைக்கும் ஒன்றும் நடந்ததாகத் தெரியவில்லை. சிறு சிறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவை அனுபவிப்பதற்கே தவிர எடுத்துச் சொல்லிக் கொள்வது வெட்கக்கேடு. பானுவின் தன்மான உணர்ச்சி சிலவற்றை மறைத்து வைக்கவும் செய்யும்----நான் அவ்வப்பொழுது மாமாவின் போக்கைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவா் என்னைப் பொறுத்தவரை ஓரளவு முகம் கொடுக்காமலதான் இருக்கிறார். அதிகமாகப் பேசுவதில்லை. மொத்தத்தில் காலம் அமைதியாகக் கடந்துகொண்டு இருப்பதுபோல் இருந்தது. இந்த அமைதி புயலுக்காக இருக்காதல்லவா என்று தோன்றியது. பானுவின் பேனா முள் உடைந்து விட்டதாம். புதிது போடச் சொல்லிக் கொடுத்தாள் ஒருமுறை. ஒரு வாரம் காலம் கடத்தினாலும் நல்ல முள் போடவைத்தேன். பானுவுக்குப் பேரீச்சம் பழம் மிகவும் பிடிக்கும். இரண்டு வீசை பேரீச்சம்பழம், ஒரு நூறு சாமந்திப் பூ---சரி. மருமகனுக்கு இருக்கவே இருக்கிறது பிஸ்கட் தட்சணை. எல்லாவற்றையும் புதிய பையில் போட்டுக்கொண்டு புறப்பட்டேன், சாக்கிரதையாகக் புதிதாக வாங்கிய சைக்கிள் மேல்.
தெருக் கதவுகள் வெறுமனே மூடியிருந்தன. உனக்கு ஏனோ இதயம் பட படத்தது. மாமாவின் குரல் மிக உச்ச நிலையில் கேட்டது. ஏதோ உரக்கச் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தாா். "இருந்தாலும் வரவர உனக்கு கா்வம் அதிகமாயிட்டுது! எனக்குத் தெரியும். உன் மண்டெக் கனமும் நீயும்-உனக்கு வீடு, குடும்பம், புருஷன், மண்ணாங்கட்டி என்னத்துக்கு?"
சைக்கிளை ஸ்டான்டு போட்டு நிறுத்தி, தெரு வாசப்படி மேல் நின்றேன்.
தொடரும்