கூறிச் சென்றால்....
கதவுகள் திறந்தன. தோள்மேல் துணி மூட்டையுடன், வண்ணான் போலும், வெளியே வந்தான். நான் பேரதிர்ச்சி அடைந்தேன். அவன் என் பக்கம் பார்த்து தலை குனிந்துகொண்டு போய்விட்டான். உலகம் தெரிந்த ஒரு மனிதன். ஒரு வண்ணான் முன்னால், மனைவியை மட்டமாக, கீழ்த்தரமாக, கற்பனை செய்ய முடியாத வகையில் திட்ட முடியும் என்ற உண்மையை நான் நேரில் பார்க்கவில்லை என்றால் நம்பியே இருக்கமாட்டேன். பெண் எவ்வளவு தன்மானம் உள்ளவளாக இருந்தும், வாய் திறந்து பதில் சொல்லாமல் பொறுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. என்ன துர்ப்பாக்கியமான நிலை!
அந்த வினாடியில் ஒரு விஷயத்துக்காக வேதனைப் பட்டேன். கடவுளைத்திட்டினேன். நானும் பானுவும் ஒரே தாய் வயிற்றில் பிறக்காததற்காக; பானுவுக்குச் சொந்த அண்ணன் இல்லாததற்காக. நானே பானுவின் சொந்த அண்ணனாக இருந்தால் என் நிலை வேறு. என் சக்தி வேறு. என் உரிமை வேறு. அவனுடைய சொல்லுக்குச் சொல்லுக்கு விலா எலும்பை உடைத்து, உடலை ஊனமாக்கி விட்டுத் தங்கையை அழைத்துச் சென்று அம்மாவிடம் ஒப்படைத்திருப்பேன். அவள் அந்த நரகத்தில் எத்தனைக் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறாளோ அதை யெல்லாம் விளக்கமாகச் சொல்லி இருப்பேன். ஆகட்டும்...ஆகட்டும்... நான் பானுவின் அண்ணன் அல்ல. எந்த விதத்திலும் பானுவுக்காக நான் பரிந்து கொண்டு போக முடியாது. நான் தொலைவிலேயே இருக்க வேண்டும்.
மீண்டும் திரும்பிப் போக வேண்டும் என்று தோன்றியது. ஆனால் மெதுவாக உள்ளே காலெடுத்து வைத்தேன். மாமா...சீ! மாமா என்று அழைப்பதற்கு என் மனம் ஒத்துக்கொள்ள வில்லை. அவர்ர் கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு தலைவாரிக்கொண் டிருந்தார். திடீரென்று பின்பக்கம் திரும்பி என்னைப் பார்த்ததுமே திடுக்கிட்டது போலாகி உடனே சமாளித்துக் கொண்டார்.
"வந்தீங்களா?" உங்க தங்கெ ரொம்ப புத்திசாலி போல இருக்குது. என்ன நிர்வாகம் பண்ணி இருக்கறாளோ பாத்தீங்களா?"
எனக்குக் கோபம் கரைபுரண்டு வந்தது. வீட்டுக்கு வந்ததும் வராததுமாக என் தங்கைமேல் என்னிடம் புகார் சொல்ல வேண்டுமா?"
மிகவும் சுருக்கமாகக் கேட்டேன் - "என்ன செஞ்சா?"
"ரொம்ப ரொம்ப பெரிய காரியம் பண்ணி இருக்கறாங்க! அதெ நீங்க கேட்டு மெச்சிக்க வேண்டியது ஒண்ணுதான் குறெச்சல்!"
அவர் பேசிய தோரணை எனக்கு அருவருப்பாக இருந்தது.