"ஓஹோ! நீங்க திட்னாக்கா மென்மெயா, நைசா, ஆனந்தமா இருக்கறாப் போல இருக்குது!"
"திட்றது எப்போதும் ஆனந்தத்தெ உண்டாக்காது. ஆனா மத்தவங்க தன்மானத்தெப் பாதிக்கற அளவு கடூரமா மட்டும் இருக்கக் கூடாது மாமா! உங்களுக்கு வாய்க்கு வந்தபடி திட்டிட்டே இருந்தா பானு எவ்வளவு வேதனெப் பட்றாளோ ஒரு தடவெயாவது நினெச்சிப் பாத்தீங்களா?"
"தேவெ யில்லே. நீங்க அவ்வளவு தன்மானம் உள்ள வங்களா யிருந்த உங்க தங்கெக்குக் கல்யாணம் கல்லெடுப்பு ஒண்ணும் இல்லாமெ அப்படியே வெச்சிகிட்டிருக்கணும்."
"அப்படின்னா உங்க எண்ணம்? கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு மனுஷத் தன்மெயெக் காப்பாத்திக்க முடியாதங்கற்தா?"
அவர் சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினார். நான் வெல வெலத்துப் போனேன்.
" ஊம்! மனுஷத்தன்மெ! வயித்துச் சோத்துக்கு ஒருத்தனெ நம்பி வாழற பொம்பளெக்கு மனுஷத் தன்மெ? எவ்வளவு அறிவோட பேசறீங்க! பசியெடுத்தா சோறு சம்பாதிச்சுக்க முடியாத பொம்பளெக்கு மனுஷத் தன்மெ, சுதந்தரம், உணர்ச்சிங்க, இலட்சியங்க...."
நான் உணர்வற்றுப் போனேன். அவர் மேலும் பேசிக் கொண்டே போனார். " பொம்பளெயெ ஆதரிக்க வேண்டியது ஆம்பளெ. பொம்பளெயக் காப்பாத்த வேண்டியது ஆம்பிளெ! பொம்பளெய அடக்கி ஆள வேண்டியது ஆம்பளெ! இந்த வேலெங்களெ யெல்லாம் ஆம்பளெங்களெப் போல பொம்பளெங்க செய்ய முடியுமா என்ன சொல்லுங்க! இயற்கெ பொம்பளெய அடக்கி வெச்சிருக்குது! இனி யாரு குடுக்கற்து சுதந்தரம் சொல்லேன்யா! இந்தப் பொம்பளெங்க சுதந்தரம், மனுஷத்தன்மெ, முன்னேற்றம் -- எல்லாம் மேடெயிலெ பேசற்துக்குத்தான் சரியா இருக்குமெ தவர, நடெமுறெயிலே வெச்சிக்கணும்னா யாராலெ முடியும்? ஆம்பளெக்கி முக்கியத்வம் இல்லேன்னா அப்பொ ஆம்பளெ பொம்பளெ வித்தியாசம் எங்கே இருந்து இருக்கும்? சரி! நீங்க எப்படி மனெவியெக் கண்டிக்காமெ மனுஷத் தன்மெயக் காப்பாத்தறீங்களோ நான் பாக்காமலா போறேன்?"
வியப்போடு நான் அப்படியே நின்றுகொண்டிருந்தேன். அவர் யார் என்பது முழுமையாக எனக்கு விளங்கிவிட்டது. பானுவைப் போல முற்போக்கு எண்ணம் உள்ளவளுக்கும் இத்தகைய பத்தாம் பசலிக் கணவனுக்கும் ஜோடி சேர்ந்தது. என்ன வேடிக்கை! பானுவின் மென்மையான இதயம் இந்தச் சச்சரவின் இடையில் உடைந்து சுக்குநூறாகிக் கொண்டுள்ளது. பரிகாரமே இல்லாத கொடுமை!
அவருடன் ஏதோ விவாதிக்க வேண்டும், அவருக்குப் புரியுமாறு செய்யவேண்டும் என்ற வேகம் கரை புரண்டது. ஆனால் ஒரு முரடனை மாற்றக் கூடிய ஆற்றல் என்னிடம் இல்லை.