(Reading time: 21 - 41 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

முரடன் ஒருவனே முரடன் அல்லன். அவனுடன் வாதாடும் அத்தனை பேரும் முரடர்களே! அவர் போய் விட்டார். நான் தெருக்கதவுகளைத் தாளிட்டு உள்ளே நடந்தேன். சமையலறை வாயிற்படியில் முழங்கால் மேல் தலை வைத்து உட்கார்ந்திருந்தாள் பானு. அமைதியாக அருகில் உட்கார்ந்துகொண்டு அவள் தலைமேல் கை வைத்தேன். தலை எடுத்து்ப பார்த்தாள். கண்கள் சிவந்து வீக்கம் கண்டிருந்தன. சட்டென்று முகத்தின் குறுக்கே கைகளை வைத்துக் கொண்டாள். என் கண்களில் நீர் துளிர்த்தது. எப்போதும் இதுபோல அழ வேண்டாம் என்று ஆறுதல் சொல்ல முடியாமல் போய்விட்டேன். சாந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நீதிகள் சொல்ல இயலாமல் போய்விட்டேன். 'உன் குடும்ப நிலை மாறும்' என்று சோதிடம் கூற முடியாமல் போய்விட்டேன். ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தேன், இருந்தாற் போலிருந்து சொன்னேன்-- " நீ இன்னும் வாயெ மூடிக்கிட்டு சும்மா இருக்கறியே ஏன்? அந்த அளவு பதில் சொல்ல முடியாம போயிட்டியா!" கோபத்தினால்--" முரட்டு மனுஷங்களோட நயமா போற்தனாலே பிரயோஜனம் இல்லே" என்றேன். பானு கண்களைத் துடைத்துக் கொண்டாள். " வண்ணான் முன்னாலெ ஒதெகூட வாங்கச்சொல்றியா?"

உண்மைதான்! தன்னுடைய வீரத்திற்கு ஒரு பெண் குறுக்கே வந்தால் அந்த மனிதன் எவ்வளவு கீழே வேண்டுமானாலும் இறங்கிப் போய்விடுவான்.

" நான் பேச்சுக்குப் பேச்சு பதில் சொன்னா இந்த நிலெயிலே என்னெக்கும் இருந்திருக்க முடியாது" என்றாள்.

" இருந்தாலும் பானு! சின்ன விஷயத்தலே எல்லாம் ஏன் அவ்வளவு முரட்டுத்தனமா நடந்துக்கறாரு?" என்றேன். சற்று நேரம் வரையில் பானு பேசவில்லை. " இது சின்ன விஷயமே தவர இதுக்கு முன்கதெ எல்லாம் காலெயிலே நடந்துட்டுது. நேத்து சாயந்தரம் அவர் பேனா பார்ட்டியிலே விழுந்துட்டுதாம். அதெ மட்டும் நம்பமாட்டேன். எந்தப் பிராண சிநேகிதனோ அழுத்திட்டிருப்பான். அம்பது ரூபா பேனா!"

"அது போயிட்டுதா? நிஜமாவா!

" நீ கல்யாணத்தலெ பிரசண்ட் பண்ணியே, அதுதான் போயிட்டுது. காத்தாலெ ஆபீசுக்குப் போற்துக்கு முன்னாலெ என் பேனாவெக் கேட்டாக்கா நிப் போட்றதுக்கு உன்கிட்டெ குடுத்திருக்கேன்னு சொன்னேன். அதனாலெ வந்தது தகராறு. உன்னெயும் என்னெயும் இஷ்டம் வந்தபடி திட்னாரு. எனக்கு உலகத்தலெ இல்லாத அண்ணன் ஒருத்தன் கிடெச்சானாம். அவனெப் பாத்துச் சொக்கிப் போய் புருஷனெ மதிக்காமெ திரியறனாம். ' அந்தப் பேனா சங்கதி என்கிட்டே ஏன் சொல்லலே? நான் நிப் போட மாட்டேனா? என்னெவிட உனக்கு அவன் ஒசத்தி ஆயிட்டானா? நீஙக ரெண்டு பேரும் சேந்து என்னெப் பைத்தியக்கார

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.