Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 19 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)
பானுவைப்பார்த்து ஒரு மாதகாலம் கடந்துவிட்டது. எத்தனையோ முறை போகலா மென்று புறப்பட்டு நின்று விட்டேன். போவதற்கு மனம் வரவில்லை. போனால் புதிய செய்தி ஏதாவது கேட்கவேண்டும். இந்த ஒரு மாதத்தில் ஒன்றும் நடந்திருக்காது என்றால், பானுவின் குடும்ப வாழ்க்கை ஒரு மாதகாலம் அமைதியாக நடந்து வருகிறது என்றால், அது கதிரவன் மேற்கே உதிக்கும் அளவு உண்மை யாகும். இருந்தாலும் பானுவுக்குத் தூரமாக இருப்பதற்கு என்மனம் ஒப்புக்கொள்ளவில்லை. பானு மனம் நோவாள். பானுவிடம் இருக்கும் புத்தகள்களை நூல் நிலையத்தில் கொடுக்க வேண்டிய தேதியும் கடந்து விட்டது. குளிப்பதற்கென்று துண்டு சுற்றிக் கொண்டவன் மீண்டும் துணிகளை அணிந்து கொண்டு புறப்பட்டேன்.
" ஒரு மாசத்துக் கப்புறம் நினெப்பு வந்தது போல இருக்குது!" என்றாள் சிரித்துக்கொண்டே பானு.
" நிஜமா ஓய்வில்லெ பானூ! பரிட்செ கிட்ட வற்துல்லியா! மருமகன் நல்லா இருக்கானா? எங்கே போயிருக்கறான்?" என்றேன் உட்கார்ந்துகொண்டே.
"பக்கத்து வீட்லெ விளையாடிக்கிட்டிருக்கறான் போல இருக்குது !"
" என்ன, ஏதாவது விசேஷம் உண்டா? மாமா நல்லா இருக்கறாரா?"
" ரெண்டு பேரும் நல்லா இருக்கறோம். பேச்சே இல்லே."
" நல்லா இருக்குது. எப்பத்தலெ யிருந்து?" " கொஞ்ச நாள் முன்னாலெ அப்பா கடிதம் எழுதனாரு."
"என்ன செய்தி?"
" ஒரு பெரிய செய்தி பாட்டி பொழச்சி இருந்தப்பொ யாருக்கோ ஒரு ஆயிர ரூபா வட்டிக்குக் கொடுத்திருந்தாங்களாம்.* போற்துக்கு முன்னாலெ அதெ வசூல் பண்ணி எனக்குக் குடுக்கச் சொல்லி சொன்னாங்க. அப்பொ எனக்குத் தெரியும். நான் அஞ்சாம் பாரம் படிச்சிட்டிருந்தப்பொ பாட்டி போயிட்டாங்க. அப்பொ எனக்குப் பதினெஞ்சி வயசு இருக்கும். எனக்கு ஆயிர ரூபா எதுக்குன்னு நினெச்சேன். அக்காங்க மத்தவங்க எல்லாரும் ஒரே கலாட்டா பண்ணுவாங்க. அந்த விஷயத்தெ நான் முழுசா மறந்து போயிட்டேன். அப்பத்தலே யிருந்து இந்த எட்டு வருஷமா செல்லு வெச்சித் திருப்பி நோட்டுங்க எழுதிட்டே வந்தாராம் அந்த ஆளு. ஒரு வாரத்துக்கு முன்னே மொத்தப் பணத்தெயும் குடுத்துட்டாராம். வட்டியோட சேந்து ரெண்டாயிர ரூபா ஆச்சாம். என்ன செய்யச் சொல்றேன்னு அப்பா கேட்டு எழுதினார். இப்பொ என்கிட்டெ ரெண்டாயிர ரூபா இருக்குது. மாமா ரொம்ப ரொம்ப மாறிப் போயிட்டாரு."
"நிஜமாயா?"
"நிஜமாவோ, இல்லியோ எனக்கென்ன தெரியும்? அந்தக் கடிதம் பாத்ததும் அவர்