நான் சரசரவென்று படியிறங்கி இருட்டில் சப்போட்டா மரத்தின் கீழே சென்று உட்கார்ந்தேன். பானுவுடன் விளையாடிய அந்தப் பாறாங்கல் அப்படியே இருந்தது. எழுந்து சென்று அந்தக் கல்லைத் தடவிக் கொடுத்தேன்.
' பானு செத்துப் போயிட்டா' என்றேன்! வளைந்திருந்த சப்போட்டாக் கிளையைக் கையால் தடவி--' பானு உனக்குத் தெரியு மில்லெ! ராத்ரி தான் செத்துப் போயிட்டா' என்றேன். கிணற்றின் கரைமேல் உட்கார்ந்து கொண்டு -- 'உனக்கு பானுவைத் தெரியு மில்லே! இப்பொ இல்லே, சமுத்ரத்தலே விழுந்து...பாவம்! செத்துப் போயிட்டா' என்றேன். எனக் கென்னவோ கண்கள் இருண்டு கொண் டிருந்தன. ஒவ்வொரு செடிக்கும், ஒவ்வொரு ஜீவனிடத்திலும் பானு இறந்துவிட்டாள் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. எனக்கு அழுகை வரவில்லை. மனம் கல்லாகி விட்டது. ஒரு வேளை எனக்கு மூளை குழம்புகிறதோ என்னவோ! பைத்தியம் பிடிக்கிறதோ எனேனவோ! இல்லையென்றால் அழுகை ஏன் வராது? நீண்ட நேரம் அந்தக் கல்லின்மேல் உட்கார்ந் திருந்தேன். பானுவின் கடிதத்தை இன்னும் நான் படிக்கவில்லை. அது வரையில் படிப்பதற்கு மனம் வரவில்லை. வாய்ப்பும் கிடைக்கவில்லை. பானு முந்திய இரவு உயிரோடு இருந்தாள். இன்னும் இறந்து போய் இருபத்தி நான்கு மணி நேரம் ஆகவில்லை. முதலில் என்ன எழுதி இருக்கிறாள்? உள்ளே சென்று வராந்தாவில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு கடிதங்களை எடுத்தேன்.
" அண்ணா! நினைக்காமலேயே உனக்கு இந்தக் கடிதம் எழுத வேண்டி வந்தது. நான் செய்யும் வேலைக்கு நீ எவ்வளவு அழுவாயோ எனக்குத் தெரியும். என்னால் ஊகிக்க முடியும். ஆனால் இது எனக்குத் தப்பாது. இத்தகைய கெட்ட நாள் எப்போதும் வரக்கூடாது என்றும், எவ்வளவு துன்பமாயினும் தாங்கிக்கொண்டு உயிரோடு இருக்க வேண்டும் என்றும், என் பாபுவை இந்தக் கைகளாலேயே வளர்த்து அறிவுள்ளவனாக ஆக்க வேண்டும் என்றும் நினைத் திருந்தேன். எத்தனையோ முறை தவறான பாதையை நாடிய மனதைக் கண்டித்து வைத்தேன். ஆவேசப் பட்டுவரும் இதயத்தை எச்சரித்து வைத்தேன். ஆனால்...அண்ணா! நான் விரும்பியது வாழ்க்கையே தவிர, நடிப்பு அல்ல. எந்த விநாடியும் அமைதியில்லாத இந்த மனத்தை, எந்த நிமிஷமும் இன்பமில்லாத இந்த உடலை எத்தனை நாட்கள், எத்தனை வாரங்கள், எத்தனை ஆண்டுகள் ஏமாற்றிக்கொண்டு இருப்பது. இம்மி யளவும் மதிப்பில்லாத இந்தச் சரீரத்தை யாருக்காக உயிரோடு வைத்துக்கொள்ள வேண்டும்?
இந்த வீட்டில் வாழ்ந்து வரும் இரண்டு மனிதர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாதவர்கள். நண்பர்கள் கூட அல்ல, குறைந்தது தெரிந்தவர்கள்கூட அல்ல. சேர்ந்து